77-வது குடியரசு தினம்.. சிறப்பு விருந்தினர்கள் டூ கருப்பொருள் வரை.. அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்
டெல்லி: நமது நாட்டின் 77-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ள குடியரசு தினத்தின் வரலாறு குறித்தும், இந்த ஆண்டு கருப்பொருள் என்ன? சிறப்பு விருந்தினர்கள் யார்? என்ற விவரங்களை பார்க்கலாம்.
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்றது. ஆனாலும் ஆங்கிலேய அடிமைத்தனத்திற்கும் சுதந்திரத்திற்கும் இடைப்பட்ட ஒரு சுயாட்சி ஆட்சி முறையாகவே இந்தியாவின் ஆட்சி பரிபாலனம் இருந்தது.

முழுமையாக சுதந்திரம் பெற வேண்டும்
சொந்தமான அரசியல் அமைப்பு சட்டம் இல்லாததால் 1935 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்த அரசியல் அமைப்பு சட்டமே நடைமுறையில் இருந்தது. ஒரு முழுமையான இறையாண்மை கொண்ட குடியரசு நாடாக மாற இந்தியாவுக்கு ஒரு வலுவான அரசமைப்பு தேவைப்பட்டது. இதற்காக சட்டமேதை அம்பேத்கர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்தக்குழு அரசமைப்பு சட்டத்தை உருவாக்கியது. இந்த சட்டம் 1949 நவம்பர் 26ல் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அது நடைமுறைப்படுத்த ஜனவரி 26, 1950 ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ஏன் இந்த தேதி என்றால் அதற்கும் பின்னணியில் ஒரு வரலாற்று நிகழ்வு உள்ளது. 1929-ல் லாகூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பிரிட்டிஷ் அரசிடம் முழுமையாக சுதந்திரம் பெற வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முப்படைகளின் அணிவகுப்பு
அந்த தீர்மானத்தின்படி 1930-ல் ஜனவரி 26 ஆம் தேதி இந்தியாவின் சுதந்திர தினம் என்று பிரகடனம் செய்து நாடு முழுவதும் தேசத்தலைவர்களால் முதல் முறையாக கொண்டாடப்பட்டது. அந்த உணர்வுமிக்க நாளின் நினைவாக அதே நாளில் 1950 ஜனவரி 26-ல் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது.
அன்று முதல் இந்தியா குடியரசு நாடாகவும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளை கொண்ட நாடாக மாறியது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் குடியரசு தினம் ஜனவரி 26-ல் கொண்டாடப்படுகிறது. குடியரசு தினத்தையொட்டி இந்தியாவின் படை பலத்தை உலகுக்கு காட்டும் விதமாக முப்படைகளின் அணிவகுப்பு ராணுவ அணிவகுப்பு டெல்லி கடமை பாதையில் நடைபெறும்.
அலங்கார ஊர்தி அணிவகுப்பு
முன்னதாக ஜனாதிபதி மூவர்ணக்கொடியேற்றுவார். முப்படை அணிவகுப்புடன், இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வாகனங்களும் குடியரசு தின ஊர்வலத்தில் பங்கேற்கும். பல்வேறு மாநிலங்களின் கலாசார வாகன ஊர்திகள் இந்த அணிவகுப்பில் கலந்து கொள்ளும். சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெறும் இந்த அணிவகுப்பில் தமிழ்நாட்டு அரசின் அலங்கார வாகன ஊர்தியும் இடம் பெறுகிறது. பசுமை மின் சக்தி என்ற தலைப்பில் அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெறும்.
சிறப்பு விருந்தினர்கள்:
குடியரசு தினவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கிறார்கள்.
கருப்பொருள் என்ன?
இந்த ஆண்டு குடியரசு தினவிழா வந்தே மாதரத்தின் 150 ஆண்டு என்ற கருப்பொருளில் இந்த ஆண்டு குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. பங்கிம் சந்திர சட்டர்ஜியால் எழுதப்பட்ட வந்தே மாதரம் பாடல் சுதந்திர வேட்கையை தூண்டியது. இந்த பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அதனை கருப்பொருளாக கொண்டு இந்த ஆண்டு குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது.












Click it and Unblock the Notifications