டெல்லி வானத்தில் நடக்கும் மேஜிக்.. வந்தே மாதரம் 150 ஆண்டுவிழா! மிரள வைக்கும் குடியரசு தின அணிவகுப்பு
டெல்லி: இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றுகிறார். அதைத் தொடர்ந்து வந்தே மாதரம்' பாடலின் 150 ஆண்டு விழாவை மையமாகக் கொண்டு அணிவகுப்பு நடைபெறுகிறது. இந்த அணி வகுப்பில் நமது நாட்டின் வீரமிகு படைகளும், இசைக் குழுவினரும் பங்கேற்கிறார்கள். இது மட்டுமின்றி விலங்கு படையும் இதில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
இந்தியாவின் 77வது குடியரசு தினம் நாடு முழுக்க இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதற்காக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வந்த நாளான குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றுகிறார். மேலும், டெல்லி கடமைப் பாதையில் ராணுவ அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இன்று ராஷ்டிரபதி பவன் முதல் தேசிய போர் நினைவிடம் வரை நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு, 'வந்தே மாதரம்' பாடலின் 150 ஆண்டு விழாவை மையமாகக் கொண்டுள்ளது. ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் இதில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர்.
காலை 10.30 மணிக்குத் தொடங்கி 90 நிமிடங்கள் நீடிக்கும் இந்த அணி வகுப்பில், பரம் வீர் சக்ரா விருது பெற்ற சுபேதார் மேஜர் (ஓய்வு) யோகேந்திர சிங் யாதவ், சுபேதார் மேஜர் சஞ்சய் குமார் ஆகியோர் அணிவகுப்பில் பங்கேற்கிறார்கள். அசோக் சக்ரா விருது பெற்ற மேஜர் ஜெனரல் சி.ஏ. பித்தாவாலியா (ஓய்வு), கர்னல் டி. ஸ்ரீராம் குமார் ஆகியோரும் இதில் பங்கேற்பர்.
மிக்ஸ்டு ஸ்கவுட்ஸ், ராஜ்புத் படைப்பிரிவு, அசாம் படைப்பிரிவு, ஜம்மு காஷ்மீர் லைட் இன்ஃபன்ட்ரி, பீரங்கிப் படை, 4 பைரவ் பட்டாலியன் (சீக்கிய லைட் இன்ஃபன்ட்ரி), மற்றும் கூட்டு ராணுவ இசை குழுவினரின் அணிவகுப்பு இதில் இடம்பெறும். ஒட்டகங்கள், சன்ஸ்கார் குதிரைகள், பருந்துகள், இந்திய நாய் இனங்கள் உள்ளிட்ட விலங்குப் படையும் காட்சிப்படுத்தப்படுகிறது.
ஸ்க்வாட்ரான் லீடர் ஜக்தேஷ் குமார் தலைமையிலான இந்திய விமானப்படை அணிவகுப்புடன், ரஃபேல், மிக்-29, சு-30, ஜாகுவார் விமானங்கள் "ஸ்பியர்ஹெட் ஃபார்மேஷன்" (Spearhead Formation) வடிவில் பறந்து சாகசம் நிகழ்த்தும். 'ஆபரேஷன் சிந்துர்' குறியீடான இந்த நிகழ்ச்சியில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்பட 29 விமானங்கள் பங்கேற்கும்.
டிஆர்டிஓ ஒரு ஹைப்பர்சோனிக் கிளைடு ஏவுகணையான நீண்ட தூரக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையையும் (LR-AShM) இதில் காட்சிப்படுத்தும். மேக் 10, அதாவது ஒலியை விட சுமார் 10 மடங்கு வேகமாகப் பயணிக்கும் இந்த ஏவுகணையில், உள்நாட்டு சென்சார்கள் மற்றும் இரு-கட்ட திட எரிபொருளைக் கொண்டுள்ளது. மேலும், 17 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள், 13 அமைச்சகங்கள் சார்பில் 30 அலங்கார ஊர்திகளும் இதில் அணிவகுத்துச் செல்லும்.












Click it and Unblock the Notifications