பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த முன்னாள் விமானப்படை அதிகாரி கைது.. ரகசிய தகவல்களை பகிர்ந்தது அம்பலம்!
திஸ்பூர்: பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக முன்னாள் இந்திய விமானப்படை அதிகாரி கைது செய்யப்பட்டார். அவர் ரகசிய ஆவணங்களை சமூக வலைதளங்கள் வாயிலாக பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், அதிகாரிகள் நடத்திய தீவிர கண்காணிப்பு மற்றும் விசாரணையை தொடர்ந்து, ஓய்வுபெற்ற முன்னாள் விமானப்படை அதிகாரி குலேந்திர சர்மா அசாமில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் முக்கியமான ரகசிய ஆவணங்களை சமூக வலைதளங்கள் வாயிலாக பாகிஸ்தான் உளவுத்துறைக்கு பகிர்ந்துள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அசாம் போலீசார் குலேந்திர சர்மாவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானுக்கு உளவாளியாக அவர் தனியாக செயல்பட்டாரா? அல்லது இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குலேந்திர சர்மா, 2002ல் இந்திய விமானப்படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹரிசரண் பூமிஜ் கூறுகையில், குற்றம்சாட்டப்பட்டவர் சமூக ஊடகங்கள் மூலம் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் முக்கியமான ஆவணங்கள் மற்றும் தகவல்களைப் பகிர்ந்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவரது லேப்டாப் மற்றும் மொபைல் போனை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அவை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இருப்பினும் சில தரவுகள் நீக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதற்கிடையே, இட்டாநகர் போலீசாரிடம் இருந்து வந்த தகவலையடுத்து, மேற்கு சியாங் மாவட்டத்தின் ஆலோவைச் சேர்ந்த ஹிலால் அகமது (26) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர், ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
கடந்த நவம்பர் 25 ஆம் தேதி பாப்பும் பாரே மாவட்டத்திலிருந்து ஆலோவிற்கு வந்த ஹிலால், பழைய மார்க்கெட்டில் நடைபெற்ற வர்த்தகக் கண்காட்சியில் போர்வைகளை விற்று வந்துள்ளார். இவர், முக்கிய தகவல்களை பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களிடம் பகிர்ந்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.
முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த நசீர் அகமது மாலிக் மற்றும் சபீர் அகமது மீர் ஆகியோர் இட்டாநகர் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும், டெலிகிராம் மூலம் ராணுவம் மற்றும் ராணுவ முகாம்கள் குறித்த விவரங்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு பகிர்ந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications