இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக அனில் சவுகான் பொறுப்பேற்பு.. சவால்களை சந்திக்க தயார் என சூளுரை
டெல்லி: இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியாக ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான் இன்று பொறுப்பேற்று கொண்டார். மறைந்த பிபின் ராவத்தை தொடர்ந்து இந்தியாவின் 2வது நபராக முப்படைகளின் தலைமை தளபதியாக பொறுப்பேற்றுள்ள அவர் நாட்டின் பாதுகாப்பை இன்னும் பலப்படுத்தி அனைத்து சவால்களையும் சந்திக்க தயார் என சூளுரைத்துள்ளார்.
இந்தியாவில் ராணுவம், விமானப்படை, கப்பற்படைக்கு தனித்தனியே தளபதிகள் உள்ளன. இந்த முப்படைகளை ஒருங்கிணைத்து செயல்படும் வகையில் முப்படை தலைமை தளபதி பொறுப்பு உருவாக்கப்பட்டது.
இந்த பொறுப்பில் முதன் முதலாக ஜெனரல் பிபின் ராவத் நியமனம் செய்யப்பட்டார். இவர் 2019 டிசம்பர் 31 முதல் மூன்றாண்டுகள் வரை தொடர்ந்து பணி செய்து வந்தார்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா தொடர்.. ஒன்றாக களமிறங்கும் அர்ஷ்தீப் சிங் - பும்ரா.. என்ன திட்டம்!
அனில் சவுகான் நியமனம்
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8ல் தமிழ் நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் இறந்தார். தற்போது 6 மாதங்களாக இந்த பொறுப்பில் யாரும் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில் தான் தற்போது முப்படைகளின் தலைமை தளபதியாக ஓய்வு பெற்ற லெப்டினன்ட் தலைமை தளபதி அனில் சவுகான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் மத்திய ராணுவ விவகாரத் துறை செயலாளராகவும் பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முப்படை தலைமை தளபதியாக பதவியேற்பு
அனில் சவுகான் இன்று டெல்லியில் முப்படைகளின் தலைமை தளபதியாக பொறுப்பேற்று கொண்டார். முன்னதாக அவர் டெல்யில் உள்ள போர் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினார். அவருடன் குடும்பத்தினர் இருந்தனர். பொறுப்பேற்ற பிறகு அனில் சவுகான் நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கையை பலப்படுத்துவதாக தெரிவித்தார். இதுதொடர்பாக அனில் சவுகான் கூறியதாவது:
சவால்களை சந்திக்க தயார்
இந்திய பாதுகாப்பு படையில் மிக உயர்ந்த பதவியில் நான் இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். முப்படைகளின் எதிர்பார்ப்பை தலைமை அதிகாரி என்ற முறையில் நிறைவேற்ற முயற்சிப்பேன். நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கையை இன்னும் பலப்படுத்த முயற்சிப்பேன். நாட்டுக்கான அனைத்து சவால்களையும், சிரமங்களையும் ஒன்றாக சமாளிப்போம்'' என சூளுரைத்தார்.
யார் இந்த அனில் சவுகான்?
முப்படைகளின் தலைமை தளபதியாக பொறுப்பேற்ற அனில் சவுகான் 1961ல் மே மாதம் 18 ம் தேதி பிறந்தார். கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் டேராடூனில் உள்ள இந்திய இராணுவ அகாடமியில் பயிற்சி பெற்றார். இவர் 1981 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தின் 11 கோர்க்கா ரைபிள்ஸில் பிரிவில் சேர்ந்தார். அதன்பிறகு 40 ஆண்டுகள் ராணுவத்தில் சேவையாற்றினார். இவர் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் கிழக்கு பிராந்திய தலைமை கமாண்ட் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் காஷ்மீரில் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார். மேலும் வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவும் திறம்பட செயல்பட்டார். இவர் பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளார்.