ரிஷப் பண்ட் விபத்து: சாலையில் பள்ளம் என்பதா? உத்தரகாண்ட் முதல்வரின் கருத்துக்கு கிளம்பிய எதிர்ப்பு!
டெல்லி: கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் விபத்து நடந்ததற்கு நெடுஞ்சாலையில் இருந்த பள்ளம் காரணமாக இருக்கலாம் என்ற ரீதியில் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியிருந்தார். ஆனால், உத்தரகாண்ட் முதல்வரின் கருத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் இருந்து தனது சொந்த மாநிலமான உத்தரகாண்டிற்கு தனது சொகுசு காரில் புறப்பட்டு சென்றார்.
டெல்லி - டேராடூன் சாலையில் ஹரித்வார மாவட்டம் ரூர்க்கி அருகே ரிஷப் பண்ட் கார் சீறிப்பாய்ந்து வந்து கொண்டிருந்தது. அதிகாலை 5.30 மணியளவில் ரிஷப் பண்டின் கார் சாலை நடுவே இருந்த டிவைடரில் கார் மோதியது.
ரிஷப் பண்ட் கார் விபத்து: ரியல் காரணமே இதுதான்.. உத்தரகாண்ட் முதல்வர் வெளியிட்ட முக்கிய தகவல்
சிகிச்சையில் ரிஷப் பண்ட்
டிவைடரில் மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் காருக்குள் இருந்த ரிஷப் பண்ட் படுகாயமடைந்தார். அந்த நேரத்தில் அச்சாலையில் வந்த அரசுப்பேருந்தின் ஓட்டுநர் சுஷில் குமார் என்பவர் உடனடியாக வந்து உதவியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பெரிய அளவில் காயங்கள் எதுவும் இன்றி ரிஷ்ப் பண்ட் தப்பினார். தற்போது உத்தரகாண்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரிஷப் பண்ட் சிகிச்சை பெற்று வருகிறார்.
உடல் நலம் விசாரித்த உத்தரகாண்ட் முதல்வர்
ரிஷப் பண்ட் மதுபோதையில் கார் ஓட்டி வரவில்லை என்றும் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து நேரிட்டதாகவும் முதலில் தகவல் வெளியானது. எனினும், இது தொடர்பாக பல்வேறு மாறுபட்ட தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பண்ட்டை நேற்று அந்த மாநிலத்தின் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ரிஷப் பண்ட்டை சந்தித்து நலம் விசாரித்தார். ரிஷப் பண்ட் குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களுடன் பேசிய புஷ்கர் சிங் தாமி, சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உத்தரகாண்ட் அரசு செய்யும் என்று உறுதி அளித்தார்.
சாலையில் பள்ளம் இருந்ததால் திருப்பியபோது..
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த உத்தரகாண்ட் முதல்வர், "காரில் வந்து கொண்டிருந்த போது சாலையில் திடீரெனெ பள்ளம் அல்லது ஏதோ கருப்பாக தெரிந்ததால் காரை திருப்பியதாகவும் இதனால், கட்டுப்பாட்டை இழந்த கார் டிவைடரில் மோதி விட்டதாக ரிஷப் பண்ட் தன்னிடம் கூறினார்" என்று தெரிவித்தார். எனினும், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதை திட்டவட்டமாக மறுத்துள்ள்னர்.
உண்மை இல்லை என மறுப்பு
இது தொடர்பாக தெசிய நெடுஞ்சாலை துறையின் ரூர்க்கி டிவிஷன் பிரிவு இயக்குனர் பிரதீப் சிங் குசைன் கூறும் போது, "விபத்து நடக்கும் போது சாலையில் எந்த பள்ளங்களும் கிடையாது. நெடுஞ்சாலையை ஒட்டி கால்வாய் ஒன்று இருப்பதால் அந்த சாலை சற்று குறுகலாக உள்ளது. இந்தக் கால்வாய் பாசன பயன்பாட்டுக்காக உள்ளது. விபத்து நடைபெற்ற பிறகு நிகழ்விடத்தில் இருந்த பள்ளம் சரி செய்யப்பட்டது என்று சொல்வதில் உண்மை இல்லை" என்றார்.
என்ன தான் நடந்தது
நெடுஞ்சாலை துறை அதிகாரி இவ்வாறு கூறினாலும், சாலையை சீர் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இணையதளங்களில் வெளியாகி இருந்தது கவனிக்க வேண்டியது. வடமாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் சில அடி தூரங்கள் மட்டுமே கண்ணுக்கு புலப்படுகிறது. இதன் காரணமாக கூட விபத்து நேர்ந்து இருக்கலாம் அல்லது ரிஷப் பண்ட் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று வெவ்வேறு தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் சாலையில் பள்ளம் இருந்ததாக உத்தரகாண்ட் முதல்வர் கூறியது கவனம் பெறுவதாக இருந்தது. இந்த நிலையில் தான் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து இருக்கின்றனர்.