கொரோனாவை விட மோசமானது சாலை விபத்து.. தமிழகமே தி பெஸ்ட் - அமைச்சர் கட்கரி
டெல்லி: நாட்டில் நிகழும் சாலை விபத்துகள் 'கோவிட் -19 தொற்றை விட மிகவும் தீவிரமானது' என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் சாலை விபத்துகள் நிகழ்கின்றன. இவற்றில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். சுமார் மூன்றரை லட்சம் பேர் காயமடைகின்றனர்.
இவ்வாறு, சாலை விபத்துகளில் நேரிடும் உயிரிழப்புகளால் மட்டும் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 3.14 சதவீதம் இழப்பு ஏற்படுகிறது.

கோவிட் விட தீவிரமானது
இதுகுறித்து சர்வதேச சாலை கூட்டமைப்பின் கூட்டத்தில் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, "விபத்துகளால் எழுபது சதவிகித இறப்புகள் 18 முதல் 45 வயதுக்குட்பட்டோரிடையே நிகழ்கின்றன. இந்தியாவில் சாலை விபத்துக்களில் ஒரு நாளைக்கு 415 பேர் இறக்கின்றனர். இந்த சூழ்நிலை கோவிட் -19 தொற்றுநோயை விட மிகவும் தீவிரமானது என்று நான் கூறுவேன், இது ஆண்டுதோறும் எங்களுக்கு ஆபத்தான சூழ்நிலையாக மாறி வருகிறது.

தீவிரமாக உள்ளேன்
துரதிர்ஷ்டவசமாக, உலகில் அதிகம் சாலை விபத்துக்கள் நிகழும் நாடுகளில் நாம் முதலிடத்தில் உள்ளோம். இது அமெரிக்கா மற்றும் சீனாவை விட அதிகம். ஒரு போக்குவரத்து அமைச்சராக இந்த விஷயத்தில் நான் தீவிரமாகவும் இருக்கிறேன்.

வீடுகளில் முடக்கம்
உலகளவில் அதிக சாலை விபத்துக்கள் இந்தியாவில் நிகழ்கின்றன. இதனால், ஆண்டுதோறும் 1.5 லட்சம் பேர் கொல்லப்படுகிறார்கள். குறிப்பாக உறுப்புகளை இழந்து 3.5 லட்சத்திற்கும் அதிகமானோர் முடங்கிக் கிடக்கின்றனர்.

தமிழகமே முன்மாதிரி
தமிழகம் சாலை விபத்துக்களை 38 சதவீதமும், இறப்புகளை 54 சதவீதமும் குறைக்கும் போது, மற்ற மாநிலங்கள் ஏன் சாலை பாதுகாப்பில் பின்தங்கியுள்ளன என்று ஆச்சர்யமாக உள்ளது. அனைத்து மாநிலங்களும் தமிழக மாதிரியைப் பின்பற்றுமாறு வலியுறுத்தியுள்ளோம். தரமான, விரிவான மற்றும் சீரான விபத்து தரவு சேகரிப்பு மற்றும் பதிவுசெய்தலின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

டிஜிட்டல் தொழில்நுட்பம்
இந்தியாவில், சாலை விபத்து மரணங்களில் 78 சதவீதம் இருசக்கர வாகன ஓட்டிகள், சைக்கிள் ஓட்டுபவர்கள், மற்றும் பாதசாரிகளுக்கே நிகழ்கின்றன. டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், ட்ரோன்கள் மற்றும் பயன்பாட்டு அடிப்படையிலான தளங்களை உருவாக்குவது அவசியம்.

மாற்றுத் தீர்வு வேண்டும்
60 சதவீத விபத்துக்கள் road junctions-களில் தான் நிகழ்கின்றன, இது அவற்றின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் குறைபாடுகள் இருப்பதை தெளிவாகக் காட்டுகிறது. அப்படியெனில், ரவுண்டானாக்கள், ஃப்ளைஓவர்கள் உள்ளிட்டவற்றை மறுவடிவமைப்பதன் மூலம் விபத்துகளுக்கு நாம் மாற்றுத் தீர்வை கண்டுபிடிக்க வேண்டும்.

சோதனை கட்டாயம்
மேலும், இந்தியாவில் விபத்துகளால் ஏற்படும் இறப்புகளில் 70 சதவீதம் அதிக வேகத்தினால் ஏற்படுவதாகும். அனைத்து வாகனங்களின் தரத்தையும் தானியங்கி வாகன ஆய்வு மற்றும் சான்றிதழ் (ஐ & சி) மையங்கள் மூலம் சோதனை செய்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications