50 ரூபாய் பொம்மை துப்பாக்கி... அடித்ததோ ரூ.50 லட்சம் நகைகள்.. பொறியியல் பட்டதாரி கைவரிசை
டெல்லி: திரைப்பட பாணியில் வெறும் 50 ரூபாய் பொம்மை துப்பாக்கியை வைத்து ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்த பொறியியல் பட்டதாரி இளைஞரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.
டெல்லி அசோக் விஹார் பகுதியில் பெரிய நகைக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த 13-ம் தேதி காலை 10 மணிக்கு வழக்கம் போல கடை திறக்கப்பட்டது. பின்னர் ஊழியர்கள் நகைகளை வெளியே எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு முகமூடியுடன் நுழைந்த ஒருவர், நகைக் கடை உரிமையாளர் அனுராஹ் குமாரின் தலையில் துப்பாக்கியை வைத்தார். இதனால் பயந்து போன அனுராஹ் குமார், தன்னை சுட்டுவிடாதீர்கள் என கெஞ்சியுள்ளார். அதையடுத்து அந்தக் கொள்ளையன், "நீ உயிருடன் இருக்க வேண்டுமானால் நான் கூறும் நகைகளை எடுத்து தா" என கூறியுள்ளான்.

அதற்கு சம்மதம் தெரிவித்த உரிமையாளர் அனுராஹ், கொள்ளையன் கூறிய 10-க்கும் மேற்பட்ட பெரிய தங்க நெக்லஸ்களை எடுத்துக் கொடுத்துள்ளார். அதன் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. அந்த நகைகளை தான் கொண்டு வந்த பையில் போட்டுக் கொண்ட கொள்ளையன் அங்கிருந்து தப்பியோடினான்.
இதனைத் தொடர்ந்து நகைக் கடை உரிமையாளர் போலீஸாருக்கு புகார் அளித்தார். இதன்பேரில் அங்கு வந்த போலீஸார் கடை மற்றும் தெருவில் இருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். ஆனால் கொள்ளையன் முகமூடி அணிந்திருந்ததாலும், போக்குவரத்து அதிகம் இருந்ததாலும் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும், கொள்ளையன் ஒரு ஆட்டோவில் ஏறிச் செல்வது மட்டும் தெரியவந்தது.
இதையடுத்து, அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்களிடம் விசாரணை நடத்தியதில், கொள்ளையனை அழைத்துச் சென்ற ஆட்டோவை போலீஸார் கண்டுபிடித்தனர். பின்னர் அந்த நபர் எங்கு இறங்கினார் என்பதை கண்டுபிடித்த போலீஸார், அரை மணிநேரத்திலேயே கொள்ளையனை கண்டுபிடித்தனர்.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், அவரது பெயர் ரிங்கு ஜிண்டால் என்பதும், பொறியியல் பட்டதாதி என்பதும் தெரியவந்தது. மேலும், ஆன்லைன் ரம்மியில் 1 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்ததால் மீண்டும் விளையாடுவதற்காக நகைக் கடையில் கொள்ளை அடித்ததாகவும் அவர் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்தார். அதுமட்டுமல்லாமல், 50 ரூபாய் பொம்மை துப்பாக்கியை வாங்கி கொள்ளையில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.
இதையடுத்து, வீட்டில் அவர் மறைத்து வைத்திருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான நகைகள், பொம்மை துப்பாக்கி ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications