பிரதமர் வேட்பாளராகும் பிரியங்கா காந்தி? நேரு குடும்பத்திலேயே எழுந்த குரல்.. அப்போ ராகுல் எதிர்காலம்?
டெல்லி: காங்கிரஸ் கட்சி வரிசையாகப் பல்வேறு தேர்தல்களிலும் தடுமாறி வரும் நிலையில், தலைமையில் மாற்றம் வேண்டும் என்ற குரல்கள் சில காலமாகவே கேட்டு வருகிறது. இதற்கிடையே நேரு குடும்பத்திலேயே தலைமை மாற்றம் குறித்த குரல்கள் எழுந்துள்ளன. எதிர்காலத்தில் பிரியங்கா காந்தி பிரதமராக வருவார் என்று குரல்கள் வர ஆரம்பித்துள்ளது.
காங்கிரஸ் கட்சி கடந்த பல ஆண்டுகளாகவே வரிசையாகப் பல்வேறு தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்து வருகிறது. இடையே கர்நாடகா, தெலுங்கானா, இமாச்சல் போன்ற ஒரு சில தேர்தல்களில் வென்றாலும் கூட ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அதிகம் தோல்வியையே சந்தித்து வருகிறது. இதனால் தலைமையில் மாற்றம் வேண்டும் என்ற குரல்கள் அவ்வப்போது எழுந்து வருகிறது.

பிரியங்கா காந்தி
ராகுல் காந்தி காங்கிரஸின் முகமாக இருக்கும் நிலையில், அவருக்குப் பதிலாக அங்கு பிரியங்கா காந்தியை கொண்டு வர வேண்டும் எனப் பலரும் வலியுறுத்துகிறார்கள். இந்திரா காந்தியை போல பிரியங்கா காந்தி காங்கிரஸுக்கு புத்துணர்ச்சியைக் கொடுப்பார் என்றும் குரல்கள் எழுந்துள்ளனர். இதற்கிடையே இப்போது நேரு குடும்பத்திற்கு உள்ளேயும் இப்போது இதே குரல்கள் எழுந்துள்ளன.
ராகுலின் மைத்துனரும் பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா கூறியுள்ள கருத்துகளே இப்போது விவாதமாகியுள்ளது. பொதுமக்கள் பிரியங்கா காந்தியை பிரதமராகப் பார்க்க விரும்புவதாகவும் அதுவே அது காலத்தின் கட்டாயம் என்றும் ராபர்ட் வதேரா கூறினார்.
நேரு குடும்பத்திலேயே
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அரசியலில் பிரியங்காவுக்கு ஒரு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. நாட்டில் தேவையான அடிப்படை மாற்றங்களை அவரால் கொண்டு வர முடியும் என நம்புகிறேன். பிரியங்கா ஆதரவாளர்கள் மட்டுமின்றி, நாட்டு மக்களின் விருப்பமாக இதுவே இருக்கிறது. எதிர்காலத்தில் இது நிச்சயம் நடக்கும். இந்த மாற்றத்தைத் தவிர்க்கவே முடியாது. மக்கள் எதிர்பார்க்கும் மாற்றங்களை பிரியங்கா கொண்டு வருவார்" என்றார்.
பிரியங்கா காந்தியை மக்கள் போற்றுகிறார்கள் என்றும் அவர் முன்வைக்கும் கருத்துகளை மக்கள் பாராட்டுகிறார்கள் என்றும் ராபர்ட் வதேரா சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக அவர் மேலும், "பிரியங்கா பேசும்போது மனதாரப் பேசுகிறார்.. முக்கியமான விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார்.. அவற்றைப் பற்றி விவாதிக்கிறார். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரிடமிருந்து பிரியங்கா அதிகம் கற்றுக் கொண்டுள்ளார்" என்றும் அவர் கூறினார்.
இம்ரான் மசூத்
முன்னதாக உபி காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத் கூட கிட்டத்தட்ட இதே கருத்துகளைத் தான் கூறியிருந்தார். இந்திரா காந்தியை போல பிரியங்காவும் ஒரு வலுவான பிரதமராக இருப்பார் என்றும் அவரது திறமையை இந்தியா பார்க்கும் என்றும் அமசூத் கூறியிருந்தார். ராகுல் காந்தி மீது காங்கிரஸ் கட்சிக்கே நம்பிக்கை இல்லாமல் போய்விட்டதையே இது காட்டுவதாக பாஜக சாடியுள்ளது.
பாஜக
இது தொடர்பாக பாஜக தரப்பு, "சமீபத்தில் ஜெர்மனிக்குப் போய் இருந்த ராகுல் காந்தி, வெளிநாட்டு மண்ணில் இருந்து கொண்டு இந்தியா பற்றியும் நமது ஜனநாயகம் பற்றியும் தவறாகப் பேசினார். நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியிருந்தார். ஆனால், சொந்தக் கட்சித் தலைவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களே கூட ராகுல் காந்தியின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள். இந்த பேச்சுகள் எல்லாம் அதையே காட்டுகிறது" என்று சாடியுள்ளனர்.












Click it and Unblock the Notifications