டெல்லி மதுபான கொள்கை வழக்கு.. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பெரும் நிம்மதி.. ஜாமீன் அளித்தது நீதிமன்றம்
டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் அளித்து டெல்லி ரோஸ் அவின்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபான வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்யலாம் என்று கெஜ்ரிவால் அச்சம் தெரிவித்த நிலையில், அவருக்கு கோர்ட் ஜாமீன் வழங்கியதால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். ஊழலுக்கு எதிராக தொடங்கப்பட்ட கட்சியான ஆம் ஆத்மி மீது அடுத்தடுத்து ஊழல் புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லி ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்த புதிய மதுபான கொள்கை கெஜ்ரிவாலுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது.

அதாவது, மதுபான கொள்கையில் உள்ள சில தகவல்கள் முன்கூட்டியே கசிய விடப்பட்டு அதன் மூலம் ஆதாயம் பெற்றதாக ஆம் ஆத்மி கட்சியினர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இந்த கொள்கையை ஆம் ஆத்மி அரசு திரும்பப் பெற்றது. புதிய மதுபான கொள்கையில் ஊழல் முறைகேடு நடைபெற்றுள்ளது, சட்டவிரோதப் பரிவர்த்தனை என நடைபெற்றது என சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது.
8 முறை சம்மன்: இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் எம்.பி உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர். இதே வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அமலாக்கத்துறை சம்மனுக்கு இதுவரை ஒருமுறை கூட கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. 8 முறை அனுப்பியுள்ள நிலையில், கெஜ்ரிவால் தொடர்ந்து சம்மனை ஏற்று ஆஜராக மறுத்து வருகிறார்.
தேர்தலுக்கு முன்பாக தன்னை கைது செய்து பிரசாரம் செய்ய விடாமல் தடுக்கும் நோக்கத்தில்தான் அமலாக்கத்துறையை ஏவி விட்டு பாஜக தனக்கு நெருக்கடி கொடுப்பதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டி வருகிறார். கடந்த 4 ஆம் தேதி அமலாக்கத்துறை, கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அன்றைய தினம் ஒரு கடிதம் ஒன்றை கெஜ்ரிவால் அமலாக்கத்துறைக்கு அனுப்பியிருந்தார்.
நேரில் ஆஜராகிய கெஜ்ரிவால்: அதில், வரும் 12 ஆம் தேதிக்கு மேல் சம்மனுக்கு பதிலளிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். வீடியோ கான்பரன்சிங் மூலம் அமலாக்கத்துறை முன் கெஜ்ரிவால் ஆஜராக தயார் என்றும் கூறியிருந்தார். இதற்கு மத்தியில் டெல்லி ரோஸ் அவின்யூ நீதிமன்றத்தில், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை புகார் மனு ஒன்றை தாக்கல் செய்தது.
ஜாமீன் வழங்கியது: இந்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம், இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவின் படி, டெல்லி ரோஸ் அவினியூ நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் நேரில் ஆஜரானார். கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜராக வந்ததையடுத்து நீதிமன்ற வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டு இருந்தது. காலை 10 மணியளவில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
15 ஆயிரம் பிணைத்தொகை மற்றும் 1 லட்சத்திற்கான உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என்று ஆம் ஆத்மி கட்சியினர் அச்சம் தெரிவித்த நிலையில், நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது ஆம் ஆத்மி கட்சியினருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications