கழிவுநீரை அகற்றும்போது தொழிலாளர்கள் உயிரிழந்தால் ரூ30 லட்சம் இழப்பீடு.. உச்ச நீதிமன்றம் அதிரடி
டெல்லி: கழிவுநீரை சுத்தம் செய்யும் போது, அகற்றும் பணியின் போது தொழிலாளர்கள் உயிரிழந்தால் அவர்களது குடும்பத்திற்கு குறைந்து ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இன்றைய நவீன தொழில் நுட்ப காலத்தில் உலகம் எவ்வளவோ வேகமாக வளர்ந்துகொண்டு இருக்கிறது. பல்வேறு தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகள் என உலகம் முன்னேறி கொண்டு இருக்கிறது. எனினும், தற்போதும் கூட நம் நாட்டில் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம் இன்றும் நடந்துகொண்டு தான் இருக்கிறது. ஒரு சில வெளிநாடுகளில் கூட மனித கழிவுகள், சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணிகளை தானியங்கி இயந்திரங்கள் செய்து வருகின்றன.

ஆனால் இந்தியாவில் பல்லாண்டு காலமாக நிலவி வரும் மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் கொடுமைக்கு இன்னும் முற்றுப்புள்ளி வைத்தபாடில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் குரல்கள் வைக்கப்பட்டு வருகின்றது. எவ்வாறாயினும் இந்தியாவில் இந்த நிலை தொடர்ந்து நீடித்துக்கொண்டு தான் வருகிறது.
பொதுநல மனு: இன்னும் சொல்லப்போனால் ஒருசில நேரங்களில் சாக்கடைகளை சுத்தம் செய்யும் போதோ, செப்டிக் டேங்க் அடைப்பை சரி செய்யும் பணியின் போதோ விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் பலியாகும் சம்பவம் அரங்கேறி வருகிறது. இதில் ஏற்படும் மரணங்களில் இந்தியாவில் தமிழ்நாடுதான் முதலில் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் பட்டியலின சமூக மக்கள் காலங்காலமாக இந்த பணிகளை செய்யும் நிலைக்கு தள்ளப்படும் கொடுமையும் பல்லாண்டு காலமாக நடந்து வருகிறது
தூய்மை பணி என்ற பெயரில் இதில் ஈடுபடும் தொழிலாளர்கள் பலியாவது அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில் தான், கடந்த 2013-ம் ஆண்டு மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதற்கு தடை, மறுவாழ்வுக்கான சட்டம் (Manual Scavengers Deaths Prevention Act) கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நடைமுறையினை எதிர்த்து சுப்ரீம் கோர்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

ரூ.30 லட்சம் இழப்பீடு: இந்த மனு இன்று சுப்ரீம் கோர்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை நீதிபதிகள் எஸ். ரவீந்திர பட் மற்றும் அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது கழிவு நீரை சுத்தம் செய்யும் போது, அகற்றும் பணியின் போது தொழிலாளர்கள் உயிரிழந்தால் அவர்களது குடும்பத்திற்கு குறைந்து ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசு உத்தரவிடப்பட்டது.
இதேபோல் கழிவு நீர் அகற்றும் பணியின் போது படுகாயமடைந்தாலோ அல்லது நிரந்தர உடல் பாதிப்பு அடைந்தாலோ ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நடைமுறையை முற்றிலுமாக ஒழித்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications