"75 வயதான உடன் தலைவர்கள் ஓய்வு பெறணும்.." ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் திட்டவட்டம்! மோடியை சொல்கிறாரா?
மும்பை: மகாராஷ்டிராவில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், தலைவர்கள் 75 வயதில் பதவியை விட்டு விலகிவிட வேண்டும் என்றார். ஏற்கனவே இந்தாண்டுடன் 75 வயதாவதால் பிரதமர் மோடி ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்க்கட்சிகள் பேசி வரும் நிலையில், ஆர்எஸ்எஸ் தலைவரே இந்தக் கருத்துகளைக் கூறியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூரில் புதன்கிழமை மாலை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மோரோபந்த் பிங்கலே தொடர்பான புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் புத்தகத்தை வெளியிட்டார். இதற்கிடையே அந்த நிகழ்ச்சியில் அவரது பேச்சு குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.

75 வயதில் ஓய்வு பெறணும்
அந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், "நீங்கள் 75 வயதை அடைந்தால் உடனே உங்கள் பணிகளை நிறுத்திவிட வேண்டும்.. மற்றவர்களுக்கு வழி விட வேண்டும் என்று அர்த்தம்" என்று கூறினார். மேலும் பேசிய பாகவத், "பிங்கலேவின் இயல்பு மிகவும் நகைச்சுவையானது.. மோரோபந்த் பிங்கலே ஒருமுறை, 75 வயதிற்குப் பிறகு உங்களுக்கு ஒரு சால்வை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டால், நீங்கள் உடனே பணியை நிறுத்த வேண்டும் என்று அர்த்தம்.
நீங்கள் வயதாகிவிட்டீர்கள்; ஒதுங்கி மற்றவர்களை உள்ளே வர விடுங்கள் என்று அர்த்தம் என்பார் பிங்கலே. அவர் தனது வாழ்க்கையை முழுக்க முழுக்க ஆர்எஸ்எஸ் சேவைக்காகத் தன்னை அர்ப்பணித்திருந்தார். ஆனாலும், வயதாகிவிட்டது என்பதை உணர்ந்தவுடன் கண்ணியமாக விலகிவிட வேண்டும் என்பதில் அவர் உறுதியாகவும் தெளிவாகவும் இருந்தார்" என்றார்.

மோகன் பகவத்
மோகன் பகவத் தனது பேச்சில் மோடி உட்பட யாருடைய பெயரையும் நேரடியாகக் குறிப்பிடவில்லை. ஆனால், இந்தாண்டு செப்டம்பர் மாதத்துடன் மோடிக்கு 75 வயதாகும் நிலையில், இது மோடிக்கு விடுக்கப்பட்ட செய்தி என்றே எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இது தொடர்பாகச் சிவசேனா (UBT) தலைவர் சஞ்சய் ராவத், "எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் ஜஸ்வந்த் சிங் போன்ற தலைவர்களை 75 வயது ஆன உடனேயே அவர்களைப் பிரதமர் மோடி ஓய்வு பெறச் செய்தார். அதே விதியை இப்போது அவரும் பின்பற்றுகிறாரா என்பதைப் பார்க்கலாம்" என்றார்.
பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ் அலுவலக விசிட்
முன்னதாக இந்த ஆண்டு மார்ச் மாதம் மோடி நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்திற்குச் சென்றிருந்தார். அவர் பிரதமராகப் பதவியேற்ற பிறகு ஆர்எஸ்எஸ் தலைமையகம் செல்வது இதுவே முதல் முறை.. பிரதமர் மோடி தனது ஓய்வு குறித்து ஆலோசிக்கவே அங்குச் சென்றதாக முன்பே சஞ்சய் ராவத் கூறியிருந்தார்.. இருப்பினும், அதை அப்போதே மறுத்த பாஜக, அது ஒரு வழக்கமான பயணம் என்றே கூறியிருந்தது.
அமித் ஷா விளக்கம்
கடந்த 2023 மே மாதமே மோடி ஓய்வு பெறுவார் என்று எதிர்க்கட்சிகள் பேசத் தொடங்கிய நிலையில், அப்போதே இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளித்திருந்தார். அதில் பாஜகவின் விதிகளில் ஓய்வு பெறும் வயது என எதுவும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். அவர் மேலும், "மோடி 2029 வரை நாட்டைத் தொடர்ந்து வழி நடத்துவார். ஓய்வு பெறும் வதந்திகளில் உண்மையில்லை" என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications