நீங்க... எத்தனை பிறவி எடுத்தாலும் சாவர்க்கர் ஆக முடியாது... ராகுல் மீது ஆர்.எஸ்.எஸ். அட்டாக்
டெல்லி: ராகுல் காந்தி எத்தனை பிறவி எடுத்தாலும் வீர சாவர்க்கர் ஆக முடியாது என ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் இந்த்ரேஷ் குமார் சாடியுள்ளார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மன்னிப்பு கேட்க நான் ஒன்றும் ராகுல் சாவர்க்கர் அல்ல; ராகுல் காந்தி என பேசியிருந்தார். விடுதலைப் போராட்டத்தின் போது ஆங்கிலேயர்களிடம் சாவர்க்கர் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுவதை முன்வைத்து ராகுல் இப்படி கூறியிருந்தார்.
ராகுலின் கருத்துக்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிரா சட்டசபையில் ராகுலுக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டு வருவோம் என முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுளார். காங்கிரஸ் கூட்டணி கட்சியான சிவசேனாவும் ராகுலின் விமர்சனத்தால் அதிருப்தி அடைந்துள்ளது.
தற்போது ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் இந்த்ரேஷ் குமார் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
சாவர்க்கரை கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சினர். அதனால்தான் அவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை கொடுத்தனர். சாவர்க்கரின் நிழலைக் கூட நெருங்க முடியாதவர் ராகுல் காந்தி.
ராகுல் காந்தியால் ஒருபோதும் சாவர்க்கர் ஆகவே முடியாது. சாவர்க்கர் ஆவதற்கு எத்தனை பிறவிகள் வேண்டுமானாலும் பிறக்க ராகுல் முயற்சிக்கலாம். ஆனால் ஒருநாளும் சாவர்க்கராகிவிட முடியாது.
ராகுலின் பெயரில் காந்தி என இருப்பது காந்தியை அவமதிப்பதாகும். ராகுலால் ஒருபோதும் காந்தியாகவோ சாவர்க்கராகவோ உருவாகவே முடியாது. ராகுலின் கருத்தால் இந்த தேசம் காயப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு இந்த்ரேஷ் குமார் கூறியுள்ளார்/