கருவறையிலேயே "ட்ரெய்னிங்".. அப்போதான் ராமர் மாதிரி குழந்தை பிறக்குமாம்.. ஆர்எஸ்எஸ் தந்த "ஐடியா"
"இந்த காலத்தில் ராமப்பிரானை போன்ற ஒழுக்கமும், வீரமும் கொண்ட குழந்தைகள் இந்தியாவுக்கு அவசியமாகிறது"
டெல்லி: கர்ப்பிணி பெண்கள் தங்கள் கருவில் உள்ள குழந்தைகளின் மனதை சுத்திகரிக்கும் பயிற்சியில் ஈடுபடுவது குறித்து ஏராளமான பெண்களுக்கும், மருத்துவர்களுக்கும் ஆர்எஸ்எஸ் பயிற்சி கொடுத்த விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
குழந்தைகள் கருவறையில் இருக்கும் போதே பல இந்து வேதங்களை படிப்பதாலும், அதுதொடர்பான உபன்யாசங்களை கேட்பதாலும் ராமப்பிரான் போல குழந்தை பிறக்கும் எனவும் ஆர்எஸ்எஸ் தெரிவித்துள்ளது.
இவ்வாறு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 1000 கரு சுத்திகரிப்பு குழந்தைகளையாவது உலகுக்கு கொண்டு வர வேண்டும் என அந்த அமைப்பு உறுதியேற்றிருக்கிறது.

கரு சுத்திகரிப்பு பயிற்சி
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மகளிர் பிரிவான 'சம்வர்தினி நியாஸ்' சார்பில் 'கர்ப்ப கலாச்சாரம்' என்ற பெயரில் பிரம்மாண்ட பயிலரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்களும், மகப்பேறு மருத்துவர்களும் கலந்துகொண்டனர். இதில், கருவில் இருக்கும் குழந்தைகளின் மனதை சுத்திகரிப்பது தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டன.

வீர சிவாஜியை போல..
எய்ம்ஸ் போன்ற பெரிய மருத்துவமனைகளில் இருந்து 80 மகப்பேறு மருத்துவர்கள் இதில் கலந்துகொண்டனர். இதுகுறித்து சம்வர்தினி நியாஸ் பிரிவின் தேசிய ஒருங்கிணைப்பு செயலாளர் மாதுரி மராத்தே கூறுகையில், "கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை சொல்லி கொடுப்பது இந்தியாவில் ஒன்றும் புதிதல்ல. உதாரணமாக, மராட்டிய மன்னர் சிவாஜி கருவறையில் இருந்த போது அவரது தாயார் ஜீஜாபாய் பகவத் கீதை, ராமாயணம் போன்றவற்றை படித்தார். கருவிலேயே இவற்றை கேட்டு வளர்ந்ததால்தான் மிகப்பெரிய இந்து வீரராக சிவாஜி திகழ்ந்தார். அதே விஷயத்தை தான் நாங்கள் இங்கு கற்றுத்தருகிறோம். தினமும் பகவத் கீதை, ராமாயணம் படிப்பது; இந்திய கலாச்சாரத்தை கருவில் இருக்கும் குழந்தைக்கு சொல்லிக்கொடுப்பது போன்ற பயிற்சிகள் இங்கு வழங்கப்படுகின்றன" என்றார்.

"அவசியமான பயற்சி"
இதுதொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் ராம ஜெயாசுந்தர் கூறுகையில், "இந்தியாவில் அண்மைக்காலமாக உடல் ஊனத்துடனும், ஆட்டிசம் போன்ற பாதிப்புகளுடனும் குழந்தைகள் பிறப்பது அதிகமாகியுள்ளது. கருவில் இருக்கும் போது தங்கள் குழந்தை குறித்து இந்த காலத்து பெண்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அதுவே, இதுபோன்ற குறைபாடுகளுக்கு காரணம். எனவேதான், குழந்தைகளின் நலனையும், அவர்களின் மனதையும் சுத்திகரிப்பதற்காக இதுபோன்ற அவசியம்" என்றார்.

1000 கரு சுத்திகரிப்பு குழந்தைகள்
இந்நிலையில், அந்த அமைப்பின் துணை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராஜன் மிட்டல் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறும்போது, "கருவில் இருக்கும் போதே குழந்தைகளை தூய்மைப்படுத்த வேண்டியது முக்கியம். இந்தியாவின் பழம்பெருமையை மீண்டும் நிலைநாட்டுவதற்காக இந்தப் பயிற்சியை நாங்கள் வழங்குகிறோம். இப்போது பாருங்கள். இந்தியாவில் எத்தனை குற்றங்கள் நடக்கின்றன.. பெற்றோரை கொலை செய்யும் பிள்ளைகள், சிறு குழந்தைகளை கூட விடாத காமுகர்கள் என நாடே சீரழிந்து கிடக்கிறது. எனவே இந்த காலத்தில் ராமப்பிரானை போன்ற ஒழுக்கமும், வீரமும் கொண்ட குழந்தைகள் இந்தியாவுக்கு அவசியமாகிறது. இந்த நோக்கத்திலேயே இத்திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆண்டுக்கு குறைந்தபட்சம் 1000 கரு சுத்திகரிப்பு குழந்தைகளை இந்தியாவுக்கு வழங்க வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்" என அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications