உக்ரைன் போருக்கு நடுவே.. திடீரென இந்தியா வந்துள்ள ரஷ்யாவின் டாப் அமைச்சர்! என்ன காரணம்? பரபர தகவல்
டெல்லி: உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இந்தியா தொடர்ந்து ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்து வருகிறது.
உக்ரைன் நாட்டில் கடந்த பிப். 24ஆம் தேதி தொடங்கிய போர், 5ஆவது வாரமாகத் தொடர்ந்து வருகிறது. இந்தப் போரால் இரு நாட்டு ராணுவங்கள் மட்டுமின்றி, உக்ரைன் மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பிய உள்ளிட்ட உலக நாடுகள் ரஷ்யா மீது கடும் பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளன. இதனால் ரஷ்யா பொருளாதார ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைன் போர்
ஒருபுறம் போர் நடைபெற்றாலும் கூட மறுபுறம் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அதில் பெரும்பாலும் எந்தவொரு உடன்பாடும் ஏற்படாத நிலையில், திடீர் திருப்பமாகக் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பல விஷயங்களில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. குறிப்பாக உக்ரைன் தலைநகர் கீவ் சுற்றியுள்ள படைகளைத் திரும்பப் பெறவும் ரஷ்யா ஒப்புக் கொண்டது. வரும் நாட்களில் போர் நிறுத்தம் தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர்
இந்தச் சூழலில், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தற்போது டெல்லி வந்துள்ளார். உக்ரைன் நெருக்கடிக்கு மத்தியிலும் இரு நாடுகளும் வர்த்தகம் மற்றும் பிற உறவுகளைத் தொடர வழிகளைக் கண்டறிந்து வரும் நிலையில், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சரின் இந்தப் பயணம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. உக்ரைன் போருக்குப் பின்னர், ரஷ்யாவின் உயர்மட்ட அமைச்சர் ஒருவர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறையாகும்.

பிரதமர் மோடி
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் நாளை பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்க உள்ளார். முன்னதாக கடந்த வாரம் தான், பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ், சீன அமைச்சர் வாங் யீ ஆகியோர் டெல்லி வந்திருந்தனர். இந்தச் சூழலில் தான், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இப்போது இந்தியா வந்துள்ளார். உக்ரைன் போர் தொடங்கிய பின்னர், ரஷ்ய வெளியுறவு அமைச்சரின் மூன்றாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். முன்னதாக இம்மாத தொடக்கத்தில் தான், அமைதி பேச்சுவார்த்தைக்காக அவர் துருக்கி சென்றிருந்தார். அதைத் தொடர்ந்து சீனாவுக்கும் அவர் சென்று இருந்தார்.

இந்தியாவின் நிலைப்பாட்டு
உக்ரைன் போர் காரணமாக மேற்குலக நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இருந்த போதிலும், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் தொடங்கி பல்வேறு பொருட்களை வாங்கி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாகவே அமெரிக்கா உடன் இந்தியா நெருக்கம் காட்டி வரும் போதிலும், சுதந்திரம் அடைந்ததில் இருந்தே ரஷ்யா நீண்ட காலமாக இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக இருந்து வருகிறது. இதன் காரணமாகவே உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலை நிலைப்பாட்டை எடுத்து இருந்தது குறிப்பிட்த்கக்கது.












Click it and Unblock the Notifications