பிரதமர் நரேந்திர மோடி - அமெரிக்க அதிபர் பைடன் இன்று முக்கிய மீட்டிங்.. என்ன காரணம் தெரியுமா
டெல்லி: அமெரிக்கா அதிபர் பைடனை இன்று காணொலி வாயிலாகப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் பைடன் இடையேயான கடைசி சந்திப்பு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. குவாட் நாடுகளின் தலைவர்களுடன் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இந்தச் சூழலில் இப்போது இரு நாட்டுத் தலைவர்களும் காணொலி வாயிலாகச் சந்தித்துப் பேச உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அறிவிப்பை வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சகம்
இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இருதரப்பு நாடுகளுக்கு இடையே உறவை மேம்படுத்த இந்த சந்திப்பு உதவும். இரு நாடுகளுக்கு இடையேயான உறவு, தெற்காசியாவில் நிலவும் சூழல் , சர்வதேச பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர். காணொலி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டம் சர்வதேச நாடுகளுக்கு இடையே வலுவான கூட்டணியை உருவாக்க உதவும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தோ-பசிபிக்
கொரோனா பெருந்தொற்று, பருவநிலை மாற்றம், சர்வதேச பொருளாதாரம், உள்ளிட்டவை குறித்து இருவரும் ஆலோசிக்க உள்ளதாக வெள்ளை மாளிகை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பை மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் இரு தரப்பும் ஆலோசிக்க உள்ளது. தெற்காசியப் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்தச் சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

உக்ரைன் போர்
குறிப்பாக உக்ரைன் போர் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர். உக்ரைனில் போரால் ஏற்பட்ட மோசமான பாதிப்புகள், சர்வதேச அளவில் உணவு சங்கிலியில் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டைக் கடந்த சில வாரங்களாக அமெரிக்கா வெளிப்படையாக எதிர்த்து வரும் நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது. முன்னதாக கடந்த மார்ச் மாதம் தான் அமெரிக்கத் துணை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் தலீப் சிங், ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் இறக்குமதி விரைவாக அதிகரிக்கும் எனத் தான் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.

அமைச்சர்கள் சந்திப்பு
இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பை தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின் ஆகியோரை சந்திக்க உள்ளனர். இருதரப்பு ஒத்துழைப்பை மதிப்பாய்வு செய்யவும் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கவும் இந்தச் சந்திப்பு உதவும். குறிப்பாக உக்ரைன் பிரச்சினையும் இதில் ஆலோசிக்க வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications