டெல்லி வருகிறார் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்.. ஸ்புட்னிக் - வி வேக்சினுக்கு இந்தியாவில் அனுமதியா?
டெல்லி: ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் இன்று இந்தியா வருகிறார். ஸ்புட்னிக் - வி வேக்சின், ஏவுகணை ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இன்று ஆலோசனை செய்யப்பட உள்ளது.
இந்தியாவில் கொரோனா கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை இந்தியாவில் தடுக்க வேண்டும் என்றால் உடன் அதிக அளவில் மக்களுக்கு வேக்சின் கொடுக்க வேண்டும்.

தற்போது 45+ வயது கொண்டவர்களுக்கு வேக்சின் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் வயது கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும். அதே சமயம் இந்தியாவில் மேலும் சில நாடுகளின் வேக்சின்களுக்கும் அனுமதி கொடுக்க வேண்டும்.
இது தொடர்பாக நேற்று பிரதமர் மோடி அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.கேபினெட் அதிகாரிகள், செயலாளர்கள், மருத்துவ நிபுணர்கள், பல்வேறு மாநில பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி உள்ளார். இந்த நிலையில்தான் ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் இன்று இந்தியா வருகிறார்.
இதில் ரஷ்யாவில் தயாராகும் ஸ்புட்னிக் - வி தடுப்பூசி பயன்பாட்டிற்கு அங்கீகாரம் அளிக்க பரிசீலனை செய்யப்படும் என்று கூறுகிறார்கள். இந்தியாவில் ஸ்புட்னிக் - வி தடுப்பூசிக்கு அனுமதி அளித்தால் வேக்சின் அளிக்கும் வேகத்தை உயர்த்த முடியும், பலருக்கு எளிதாக வேக்சின் கொடுக்க முடியும்.
இதனால் ரஷ்ய வேக்சின் தொடர்பாக இன்று விவாதிக்க உள்ளனர். ரஷ்ய அமைச்சர் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இதில் எஸ் 400 போன்ற ஏவுகணையை தாக்கி அழிக்கும் உபகரணங்கள் வாங்குவது குறித்தும் ஒப்பந்தங்கள் செய்யப்பட உள்ளன. செர்கே லாவ்ரோவ் இன்று பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்திக்க உள்ளார்.
இந்திய பயணத்தை முடித்துவிட்டு ரஷ்ய அமைச்சர் செர்கே லாவ்ரோவ் இரண்டு நாள் பயணமாக பாகிஸ்தான் செல்ல உள்ளதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications