பள்ளிகளில் ஒரே மாதிரியான சீருடை.. முக்கிய விஷயத்தை கூறி பாஜக வக்கீல் மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
டெல்லி: நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான சீருடையை அமல்படுத்தக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் இந்த விவகாரம் என்பது உச்சநீதிமன்ற வரம்பிற்கு உட்பட்டது அல்ல என நீதிமன்றம் கூறியது.
இந்தியாவில் பள்ளி, கல்லூரிகளில் சீருடை தொடர்பான விவாதங்கள் சமீப காலமாக எழுந்து வருகிறது. இது அவ்வப்போது சர்ச்சையை கூட கிளப்பி வருகிறது.

சமீபத்தில் கூட கர்நாடக மாநிலத்தில் பியூ கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்ல கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது போராட்டமாக வெடித்த நிலையில் சர்ச்சையானது.
இந்நிலையில் தான் பாஜக கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா பொதுநல மனு ஒன்றை டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், ‛‛நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான சீருடை முறையை பின்பற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க வேண்டும்'' என கூறியிருந்தார். மேலும் அதற்கான காரணங்களையும் அவர் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான சீருடை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த மனு உச்சநீதிமன்றத்தின் வரம்புக்கு உட்பட்டதாக இல்லை எனவும் உச்சநீதிமன்றம் கூறியது.
இந்தியாவை பொறுத்தமட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறான காலநிலை நிலவுகிறது. இதனால் இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் ஒரேமாதிரியான சீருடை பின்பற்ற முடியாது என்ற வாதம் பொதுவாக இருந்த நிலையில் தான் அதனை பின்பற்ற வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும் இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications