நாளை மகாபஞ்சாயத்து..நவ. 29இல் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு டிராக்டர் பேரணி.. விவசாயிகள் திட்டவட்டம்
டெல்லி: விவசாய சட்டங்களை வாபஸ் பெறுவதாகப் பிரதமர் மோடி அறிவித்த போதிலும், அச்சட்டங்கள் அதிகாரப்பூர்வமாக திரும்பப்பெறப்படும் வரை போராட்டங்கள் திட்டமிட்டபடி தொடர்ந்து நடத்தப்படும் என விவசாயச் சங்கங்கள் அறிவித்துள்ளன,
கடந்த ஆண்டு மத்திய அரசு புதிதாக 3 விவசாய சட்டங்களைக் கொண்டு வந்தது. இருப்பினும், இந்தச் சட்டங்கள் விவசாய நலனுக்கு எதிராக இருப்பதாகக் கூறி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முதலில் பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தொடங்கினர் அங்கு ரயில் மறியல் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்திய விவசாயிகள், நவ. 26ஆம் தேதி தலைநகர் டெல்லியை நோக்கி முற்றுகையிட்டனர்.

விவசாய சட்டங்கள்
இது தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருப்பினும், சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டத்தைக் கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என விவசாயிகள் அறிவித்துவிட்டதால் பேச்சுவார்த்தை நின்றுபோனது. மத்திய அமைச்சர்களும் பாஜக தலைவர்களும் கூட விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை எனத் தொடர்ந்து கூறி வந்தனர்.

சட்டம் வாபஸ்
இந்தச் சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை 3 விவசாய சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்த பிரதமர் மோடி, மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக அறிவித்தார். இருப்பினும், மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதாவை இயற்றி சட்டத்தை முறையாக வாபஸ் பெறும் வரை போராட்டங்கள் தொடரும் விவசாயிகள் அறிவித்தனர். இதனால் தலைநகர் டெல்லியில் இன்னும் போராட்டம் தொடர்கிறது.

போராட்டம் தொடரும்
வரும் நவ. 29ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், முதல் நாளே விவசாய சட்டங்களை ரத்து செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், வரும் நவ. 29ஆம் தேதி வரை திட்டமிட்டபடி போராட்டங்களைத் தொடரவும் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். அதன்படி நாளைய தினம், அதாவது நவ. 22ஆம் தேதி லக்னோவில் மகாபஞ்சாயத்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை நோக்கி டிராக்டர் பேரணி
அதைத்தொடர்ந்து நவ. 26ஆம் தேதி விவசாய போராட்டம் தொடங்கி ஓர் ஆண்டு முடிவடைவதை முன்னிட்டு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளான நவ. 29ஆம் தேதி நாடாளுமன்றத்தை டிராக்டர் மூலம் முற்றுகையிட உள்ளனர். இந்த அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

இரங்கல் கூட்டம்
மத்திய அரசு அறிவிப்பைத் தொடர்ந்து 9 முக்கிய விவசாயச் சங்கத் தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் சிங்கு எல்லையில் நடந்தது இதையடுத்து பாரதிய கிசான் யூனியனின் (பிகேயு) செய்தித்தொடர்பாளர் தர்மேந்திர மாலிக் கூறுகையில், "விவசாய சட்டங்கள் நாடாளுமன்றத்தில் ரத்து செய்யப்படும் வரை, திட்டமிட்டபடி அனைத்து போராட்டங்களும் நடத்தப்படும். போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் இரங்கல் கூட்டம் வரும் நவம்பர் 29ஆம் தேதி நடைபெறும். அன்றைய தினம் நடைபெறும் கூட்டத்தில் எங்கள் அடுத்து வரும் திட்டம் குறித்து முடிவு செய்வோம்" என்று அவர் தெரிவித்தார்.

இன்னும் அவர் மாறவில்லை
இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய கிசான் யூனியனின் தேசிய செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட், "பிரதமர் நரேந்திர மோடியின் தொடர்ந்து விவசாயிகளைப் பெரியவர் மற்றும் சிறியவர் என்று பிரிக்கவே முயன்று வருகிறார். அவர் எங்களை குச் கிசான் (ஒரு சில விவசாயிகள்) என்று தானே அழைத்திருந்தார், தொலைக்காட்சியில் உரையாற்றினால் மட்டும் போதாது. ஜனநாயக நாட்டில் ஒருதலைபட்சமான முடிவுகள் எடுக்கப்படுவதில்லை.

நிறைய பிரச்சினைகள் உள்ளன
இந்த கறுப்புச் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை திரும்பப் பெறப்பட வேண்டும். விவசாயிகளை அழைத்து இந்த அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். MSP எனப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. வரவிருக்கும் விதைச் சட்டம் முதல் மின்சாரத் திருத்த மசோதா வரை, பல சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் இன்னும் நிலுவையில் உள்ளன. விவசாயச் சங்கங்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஞாயிற்றுக்கிழமை அரசுக்கு ஒரு முன்மொழிவை அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications