அசோக் கெலாட் vs சசி தரூர்.. சூடு பிடித்த காங்கிரஸ் தலைவர் தேர்தல்! யாருக்கு அதிக வாய்ப்பு? பின்னணி!
டெல்லி: காங்கிரஸ் கட்சியில் தேசிய தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்க உள்ளது. காங்கிரஸ் கட்சியில் சோனியா, ராகுல் காந்தி ஆகியோர் தலைவராக பொறுப்பேற்க முன்வரவில்லை. தங்களுக்கு தலைவர் பதவி வேண்டாம் என்று இருவரும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.
சோனியா காந்திக்கு உடல்நிலை சரியில்லை. இனியும் அவரால் கட்சியை வலுவாக வழிநடத்த முடியாது என்பதால் அவர் போட்டியிடவில்லை என்று கூறப்படுகிறது. இதை அவரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் கூறிவிட்டார்.
இன்னொரு பக்கம் நான் காங்கிரஸ் கட்சிக்காக போராடுகிறேன். களத்தில் நிற்கிறேன். பிரச்சாரம் செய்கிறேன். ஆனால் தலைவராக விருப்பமில்லை. ஆளை விடுங்கள் என்று ராகுல் காந்தியும் ஒதுங்கிக்கொண்டார்.
கண்டிப்பாக தலைவர் பதவிக்கு நான் போட்டியிட மாட்டேன் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
சசி தரூருக்கு கிரீன் சிக்னல்? அப்செட் ஆன அசோக் கெலாட்.. நேரடியாக போன் போட்ட சோனியா! நடப்பது என்ன
நேரு குடும்பம்
இதனால் காங்கிரஸ் கட்சியில் கடந்த 24 வருடங்களில் மிகப்பெரிய மாற்றத்திற்கு தயாராகி வருகிறது. நேரு குடும்பத்தை சேராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன. இந்த முறை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிட உள்ளார். அதேபோல் அவரை எதிர்த்து திருவனந்தபுரம் எம்பி சசி தரூர் போட்டியிட உள்ளார். இது போக மனிஷ் திவாரி, கமல் நாத் போன்றவர்களும் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தல்
அக்டோபர் 17ம் தேதி காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடக்க உள்ளது. அக்டோபர் 19 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். இதற்கான வேட்புமனுத் தாக்கல் வரும் இன்று, செப்டம்பர் 24 தொடங்குகிறது. செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற இருக்கிறது. 71 வயது நிரம்பிய மூத்த தலைவரான அசோக் கெலாட், சோனியா ஆதரவுடன் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் நேரு குடும்பத்திற்கு நெருக்கமான தலைவர். அசோக் கெலாட் நீண்ட கால, பாரம்பரிய காங்கிரஸ் உறுப்பினர். இந்திரா காந்தி காலத்து காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட். கட்சியின் தீவிர விசுவாசி, மூத்த தலைவர்.
ஜி 23 குழு
அசோக் கெலாட் தலைவராகும் பட்சத்தில் சச்சின் பைலட் ராஜஸ்தான் முதல்வர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் ஒரு தலைவருக்கு ஒரு பதவி என்ற விதி உள்ளது. இதை ராகுல் காந்தியும் நேற்று குறிப்பிட்டு பேசி இருந்தார். இதனால் கண்டிப்பாக அசோக் கெலாட் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வார். காங்கிரஸ் தலைவர் தேர்தலை அசோக் கெலாட்டை எதிர்த்து ஜி 23 தலைவர் சசி தரூர் போட்டியிட உள்ளார். சசி தரூர் திருவனந்தபுரம் எம்பியாக இருக்கிறார்.
யார் இவர்?
இவர் முன்பே தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்தாக தகவல்கள் வந்தன. காங்கிரஸ் கட்சியில் சோனியா - ராகுலுக்கு எதிராக இருக்கும் ஜி 23 தலைவர்களில் இவரும் ஒருவர். சோனியாவின் தலைமைக்கு எதிராக இவர் பேசி வந்தார். இந்த நிலையில்தான் இவர் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்துள்ளார் என்கிறார்கள். இவர் கடந்த திங்கள் கிழமை பிற்பகல் சோனியா காந்தியை சந்தித்து தலைவர் பதவிக்கு போட்டியிட போவதாக கூறி உள்ளார். அதற்கு சோனியா காந்தியும் சம்மதம் தெரிவித்தாக கூறப்படுகிறது.