புல்வாமா தாக்குதல்.. வாய் மூடி இருக்கச் சொன்னார் பிரதமர் மோடி .. ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் பேட்டி
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலட்சியமே புல்வாமா தாக்குதலுக்கு காரணம் என்றும், அதை கூறிய போது, பிரதமர் மோடி தன்னை அமைதியாக இருக்குமாறு கூறியதாகவும் ஜம்மு காஷ்மீரின் ஆளுநராக இருந்த சத்ய பால் மாலிக் கூறியுள்ள வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சி.ஆர்.பி.எஃப் தங்களுடைய வீரர்களை அழைத்துச் செல்ல விமானம் கேட்டது. ஆனால், உள்துறை அமைச்சகம் அதற்கு மறுத்துவிட்டது. மொத்தமே ஐந்து விமானம் தான் தேவைப்பட்டது. ஆனால் தர மறுத்துவிட்டார்கள். அப்போது உளவுத்துறை குண்டுவெடிப்பை கணிக்க தவறியதும், பாதுகாப்பு குறைபாடுமே தீவிரவாத தாக்குதலுக்கு ராணுவ வீரர்கள் இலக்காக காரணம் என்றும் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் இப்போது கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தி வயர் நியூஸ் போர்ட்டலுக்காக பத்திரிக்கையாளர் கரண் தாப்பருக்கு ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் அண்மையில் பேட்டி அளித்தார்.
அந்த பேட்டியில் சத்யபால் மாலிக் கூறியுள்ள சில விஷயங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகள் பேருந்தை குறிவைத்து நடத்திய குண்டுவெடிப்பில் இந்திய ராணுவ வீரர்கள் 40 பலியாகினர். இந்த சம்பவம் மொத்த இந்தியாவையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில், புல்வாமா தாக்குதல் நடந்தபோது ஜம்மு காஷ்மீரின் ஆளுநராக இருந்த சத்ய பால் மாலிக், வயர் தளத்திற்கு அளித்த பேட்டியில் கூறும் போது, ராஜ்நாத் சிங் தலைமையிலான அப்போதைய மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலட்சியமே புல்வாமா தாக்குதலுக்கு காரணம் என்றார். "பெரிய கான்வாய்கள் சாலையில் பயணிப்பதில்லை. அதனால், சி.ஆர்.பி.எஃப் தங்கள் வீரர்களை அழைத்துச் செல்ல விமானம் கேட்டது. அவர்களுக்கு ஐந்து விமானங்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால், உள்துறை அமைச்சகம் அந்த விமானங்களை தர மறுத்துவிட்டது. உள்துறை அமைச்சகம் விமானங்களை வழங்கியிருந்தால், இது நடந்திருக்காது. பிறகு, நம்முடைய தவறு காரணமாகவே இந்தத் தாக்குதல் நடந்தது. இதைபற்றி அன்று மாலையே பிரதமர் மோடியிடம் கூறினேன். ஆனால் பிரதமர் மோடி, அதுப் பற்றி பேசாமல் அமைதியாக இருக்குமாறு என்னை கேட்டுக்கொண்டார்" என்றார். இதேபோல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் யாரிடமும் கூறாமல் அமைதியாக இருக்குமாறு கூறினார் என்றும் சத்யபால் மாலிக் கூறியுள்ளார்.
300கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து 10-15 நாட்களாக காரில் கஷ்மீரின் வீதிகளில் சுற்றிவந்துள்ளதே, எந்தளவிற்கு நம்முடைய உளவுத்துறை செயலாற்றியுள்ளது என்பதை புரிந்துகொள்ளலாம். எல்லாம் பிரச்சனையில்லை. அவரை சுற்றி உள்ளவர்கள் எல்லாம் அவருடைய பெயரை பயன்படுத்தி அதிகமாக சொத்து சேர்க்கிறார்கள். கஷ்மீர் பற்றிய துளி அறிவு கூட மோடிக்கு கிடையாது, மாநில அந்தஸ்த்தை எடுத்ததைவிட முட்டாள்தனம் இல்லை" என சத்யபால் மாலிக் கூறியிருந்தார்.

முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கின் இந்த பேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சத்யா பால் மாலிக்கின் நேர்காணல் வீடியோவைப் பதிவிட்டு சில கருத்துக்களை பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், " உங்கள் அரசின் தவறால் தான் இந்த தாக்குதலும், 40 வீரர்களின் உயிர்தியாகமும் நடந்துள்ளது. நம்முடைய வீரர்களுக்கு விமானம் கிடைத்திருந்தால், தீவிரவாத சதி தோல்வியடைந்திருக்கும். இந்தத் தவறுக்கு நீங்கள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், ஆனால், நீங்கள் இந்த உண்மையை மறைத்து, உங்கள் இமேஜைக் காப்பாற்ற முயற்சிக்கிறீர்கள். தற்போது சத்ய பால் மாலிக்கின் வார்த்தைகளால் நாடே அதிர்ச்சி அடைந்துள்ளது" என ட்வீட் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி கூறும் போது, "புல்வாமா தாக்குல் பழியை எப்பவும் போல் பக்கத்து நாட்டின் மீது சுமத்தி தேசபக்தி நாடக அரசியல் மூலம் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தார் என ஜனநாயகவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டுக்கு மீண்டும் ஒரு சாட்சியாய் புல்வாமா தாக்குதல் நடந்தபோது அம்மாநிலத்தின் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் ஒப்புதல் வாக்குமூலம் வந்து உள்ளது! தேசபக்தி என்பது மத தீவிரவாத அமைப்பான RSSக்கு எப்போதும் ஊறுகாய் தான்!" என்று குற்றம்சாட்டி உள்ளார்.












Click it and Unblock the Notifications