சவுதி முதலிடம்.. அமெரிக்கா 2வது இடம்.. 2025ல் இந்தியர்களை அதிகமாக நாடு கடத்திய நாடுகளின் பட்டியல் இதுதான்!
டெல்லி: நடப்பு 2025ம் ஆண்டில் 81 நாடுகளில் இருந்து மொத்தம் 24,600 இந்தியர்கள் நாடு கடத்தி வரப்பட்டுள்ளனர். இதனை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ள நிலையில் அமெரிக்காவை விட சவுதி அரேபியா தான் அதிகமான இந்தியர்களை நாடு கடத்தி உள்ள முக்கிய விவரம் வெளியாகி உள்ளது. எந்தெந்த நாடுகள் எவ்வளவு இந்தியர்களை நாடு கடத்தி உள்ளது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
ஒவ்வொரு நாடுகளை சேர்ந்த மக்களும் வெளிநாடுகளில் தங்கி பணியாற்றி வருகின்றனர். முறையான பாஸ்போர்ட், விசா எடுத்து வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும். அதுமட்டுமின்றி வெளிநாடுகளுக்கு சென்ற பிறகு அந்த நாட்டின் சட்டத்தை மதித்து செயல்பட வேண்டும்.

ஆனால் சிலர் சட்டவிரோதமாக வெளிநாடு செல்வதோடு, அங்கிருக்கும் சட்டங்களுக்கு விரோதமாக செயல்படுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இப்படியானவர்களை ஒவ்வொரு நாடுகளும் நாடு கடத்தும். அதாவது சொந்த நாடுகளுக்கே அனுப்பி வைக்கும்.
அந்த வகையில் தான் பல்வேறு காரணங்களுக்காக 2025ம் ஆண்டில் 81 வெளிநாடுகளில் இருந்து 24,600 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இதனை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. சமீபத்தில் மழைக்கால கூட்டத்தொடரில் இதுதொடர்பான டேட்டாவை மத்திய அரசு வழங்கியது.
அதன்படி அதிகபட்சமாக 2025ம் ஆண்டில் 12 மாதங்களில் சவுதி அரேபியாவில் இருந்து 11 ஆயிரம் பேர் நாடு கடத்தி வரப்பட்டுள்ளனர். இது அமெரிக்காவை விட அதிகமாகும். ஏனென்றால் அமெரிக்காவில் இருந்து 2025ம் ஆண்டில் 3,800 இந்தியர்கள் மட்டுமே நாடு கடத்தி வரப்பட்டுள்ளனர். குறிப்பாக வாஷிங்டன் டிசியில் இருந்து 3,414 பேரும், ஹஸ்டனில் இருந்து 234 பேரும் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் இருந்து ஒரு ஆண்டில் நாடு கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையை எடுத்து கொண்டால் கடந்த 5 வருடங்களில் இதுதான் அதிகம்.
அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு அந்த நாட்டில் விசா, குடியேற்றம் உள்ளிட்டவற்றுக்கான சட்டம் கடுமையாக்க்பபட்டுள்ளது. அதோடு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி இருக்கும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களை நாடு கடத்துவதும் அதிகரித்துள்ளது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
சவுதி அரேபியா, அமெரிக்காவுக்கு அடுத்தததாக 3வது இடத்தில் மியான்மர் உள்ளது. அங்கிருந்து 1,591 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அதேபோல் மலேசியாவில் இருந்து 1,485 இந்தியர்களும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 1,469 இந்தியர்களும், பஹ்ரைனில் இருந்து 764 பேரும், ம தாய்லாந்தில் இருந்து 481 பேரும், கம்போடியாவில் இரந்து 305 பேரும் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இதில் அரபு நாடுகளை எடுத்து கொண்டால் இந்தியர்கள் வேலைக்காக சென்று விசா காலம் முடிந்த பிறகும் வேலை செய்வது, வொர்க்கிங் பெர்மிட் இல்லாமல் பணியாற்றியது, தொழிலாளர் சட்டங்களை மீறியது, சிவில், கிரிமினல் வழக்குகளில் சிக்கியது உள்ளிட்ட புகாரால் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல் கம்போடியா, மியான்மர் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியர்களை வேலைக்கு அழைத்து செல்லும் கும்பல் சைபர் மோசடியில் ஈடுபடுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளது. இந்த புகாரில் தான் அங்கிருந்து இந்தியர்கள் அதிகமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications