7.5% வட்டியில் மகளிருக்கு புதிய சிறுசேமிப்பு திட்டம்..முதியோர் வைப்பு நிதி ரூ.30 லட்சம்..அதிரடி
பெண்கள் மற்றும் சிறுமிகள் சேமிப்பு திறனை அதிகரிக்க மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் என்ற புதிய திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: பெண்களின் சேமிப்பு திறனை ஊக்குவிக்கும் வகையில் 7.5% வட்டியில் புதிய சிறுசேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். பெண்களுக்கு மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் என்ற புதிய திட்டம் தொடங்கப்படும். மூத்த குடிமக்களுக்கு தபால் நிலையங்களில் வைப்புத்தொகை வரம்பு ரூ.15 லட்சத்தில் இருந்து 30 லட்சமாக அதிகரிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பல பொருட்களுக்கு வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. சில பொருட்களுக்கு வரிகள் குறைக்கப்பட்டுள்ளன.
2024 தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட்டும் முழு பட்ஜெட் என்பதால் வருமானவரி சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இந்த பட்ஜெட்டினால் மாத சம்பளம் வாங்குபவர்கள் சற்றே மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இன்றைய பட்ஜெட் உரையில் சிறு சேமிப்பு திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்பும் வெளியாகியுள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் என்ற புதிய சிறு சேமிப்பு திட்டம் தொடங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இது ஒரு முறை மட்டும் முதலீடு செய்வதற்கான சிறு சேமிப்பு திட்டம். 2025 மார்ச் மாதம் வரை இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
2070ம் ஆண்டுக்குள் வாகன புகை இல்லாத நாடாக இந்தியா மாற்றப்படும்- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் பெண்கள், சிறுமிகள் பெயரில் 2 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம். இத்திட்டத்தில் 7.5% என்ற நிலையான வட்டி விகிதம் வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தில் உள்ள தொகையில் பாதி தொகையை எடுத்துக்கொள்வதற்கான வசதியும் இருக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதே போல மூத்த குடிமக்களுக்கு அஞ்சலகங்களில் வைப்பு நிதி வரம்பு ரூ.15 லட்சத்தில் இருந்து 30 லட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, சிறு சேமிப்பு திட்டங்கள் அல்லது தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் இந்தியாவில் அறிமுகபடுத்தப்பட்டது.
இத்திட்டத்தின்கீழ், தபால் அலுவலக சேமிப்பு கணக்கு, பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்பு சான்றிதழ், சுகன்யா சம்ரித்தி யோஜனா, 5 ஆண்டு மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், ஐந்து ஆண்டு தொடர் வைப்பு கணக்கு போன்ற ஒன்பது திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதமானது ஒவ்வொரு காலாண்டும் அரசால் நிர்ணயிக்கப்படும்.
அதனடிப்படையில், தபால் அலுவலக சேமிப்பு கணக்குகளுக்கான ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடர்ந்து நீடிக்கும். 15 வருட பொது வருங்கால வைப்பு நிதிக்கு 7.1 சதவீத வட்டியும், தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் 6.8 சதவீத வட்டியும், சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்திற்கு 7.4 சதவீத வட்டியும் வழங்கப்படும்.
5 ஆண்டு மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்துக்கு 7.4 சதவீத வட்டி தொடர்ந்து நீடிக்கும். 5 ஆண்டு தொடர் வைப்பு கணக்குகளுக்கு 5.8 சதவீத வட்டி வழங்கப்படும். 1 முதல் 5 ஆண்டுகளுக்கான முதலீட்டு கணக்குகளுக்கு 5.5 சதவீதம் முதல் 6.7 சதவீத வட்டியும் கிடைக்கும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்றைய மத்திய பட்ஜெட்டில் பெண்கள், சிறுமிகளுக்கு 7.5 சதவிகித வட்டியில் புதிய சேமிப்பு திட்டமும், முதியோர் வைப்பு நிதி உச்சவரம்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.