மோசமான நிதி நிலை.. யெஸ் வங்கியின் 49 சதவீத பங்குகளை வாங்க எஸ்பிஐ வங்கி திட்டம்?
மும்பை: யெஸ் வங்கியின் 49 சதவீதம் பங்குகளை வாங்க பாரத ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படுவது யெஸ் வங்கி. கடந்த 2004-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்த வங்கி. இந்த வங்கிக்கு நாடு முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன.

இந்த வங்கியின் வருவாய் கடந்த 2018ஆம் ஆண்டு ரூ 25,491 கோடியாக இருந்தது. இந்த நிலையில் இந்த வங்கி வாராக் கடன் பிரச்சினையில் சிக்கிவிட்டது. இதனால் இதன் நிதி நிலைமை மோசமடைந்துவிட்டது. வங்கிகளை நடத்துவதற்கே மூலதன முதலீடுகளை திரட்ட முடியாமல் போய்விட்டது.
இதையடுத்து யெஸ் வங்கியில் வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு ரூ 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுக்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
யெஸ் வங்கியின் மோசமான நிதி நிலையை கருத்தில் கொண்டு மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி அந்த வங்கி நிர்வாகத்தை 30 நாட்களுக்கு எடுத்துக் கொள்வதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மறுசீரமைப்பு மற்றும் மற்ற வங்கியுடன் இணைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி பிரசாந்த் குமார், யெஸ் வங்கியின் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் யெஸ் வங்கியின் 49 சதவீத பங்குகளை வாங்க பாரத ஸ்டேட் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து எஸ்பிஐ தலைவர் ரஜ்னீஷ் குமார் கூறுகையில் யெஸ் வங்கியின் 49 சதவீத பங்குகளை வாங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறோம். யெஸ் வங்கியில் ரூ 2,450 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். இதுதொடர்பாக எஸ்பிஐ வங்கி குழுவும் சட்ட ஆலோசகர்களும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications