ஜம்மு காஷ்மீரில் 35ஏ சட்டம் அடிப்படை உரிமைகளை பறித்தது! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குற்றச்சாட்டு
டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த 35ஏ சட்டம், அம்மாநிலத்தை பூர்வீகமாக கொள்ளாத ஆனால் அங்கு வசிக்கும் மக்களின் அரசியலமைப்பு உரிமைகளை பறித்துள்ளது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370ஐ கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பாஜக தலைமையிலான மத்திய அரசு திடீரென நீக்குவதாக அறிவித்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அனைத்து எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் குதித்தன. இருப்பினும் மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. முன்னதாக இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்னர் ஜம்மு காஷ்மீரின் அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். இப்படியாக இந்த சிறப்பு சட்டம் நீக்கப்பட்டு தற்போது 4 ஆண்டுகள் ஆகிறது.

இந்நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி முதல் திங்கள் மற்றும் வெள்ளி தவிர மற்ற நாட்களில் வழக்கு விசாரணை மேற்கொள்ளப்படும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது.
இந்நிலையில், நேற்று 11வது நாளாக விசாரணை நடைபெற்ற நிலையில், "ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த 35ஏ சட்டம், அம்மாநிலத்தை பூர்வீகமாக கொள்ளாத ஆனால் அங்கு வசிக்கும் மக்களின் அரசியலமைப்பு உரிமைகளை பறித்துள்ளது" என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் கூறியுள்ளார். மேலும், "சமவாய்ப்பு, மாநில அரசாங்கத்தில் வேலை வாய்ப்பு மற்றும் நிலம் வாங்குவதற்கான உரிமை போன்றவை அந்த மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்களுக்கு மட்டுமே இருந்தது.
மற்றவர்கள் இந்த விவகாரத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தனர். இந்திய அரசியலமைப்பு ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்பை விட உயர்ந்த தளத்தில் உள்ள ஒரு ஆவணம் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். மாநிலத்தின் வேலைவாய்ப்பு அனைவருக்கும் உறுதி செய்யப்பட வேண்டும். அதேபோல இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 19வது பிரிவு நாட்டின் எந்தப் பகுதியிலும் வாழவும் குடியேறவும் உரிமையை அங்கீகரிக்கிறது. ஆனால் இவற்றை ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவான 35ஏ பறிக்கிறது" என்று கூறியுள்ளார்.
மத்திய அரசும் இந்த வழக்கில் இதே வாதத்தைதான் முன்வைத்திருக்கிறது. முதலீடுகள் வந்தால்தான் ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி பெறும். ஆனால் இந்த முதலீடுகளுக்கு சிறப்பு அந்தஸ்து சட்டம் இடையூறாக இருந்தது என்று மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications