சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.கே.மிட்டல்- கொலீஜியம் பரிந்துரை
டெல்லி: சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஏ.கே. மிட்டலை (அஜய்குமார் மிட்டல்) நியமிக்க உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் அடங்கிய குழுவான கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக விஜயா கமலேஷ் தஹில் ரமணி கடந்த ஆண்டு பதவியேற்றார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தஹில் ரமணியை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற கொலீஜியம் குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான ஏ.கே. மிட்டலை கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. அதேபோல் தற்போதைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணியை மேகாலயா மாநிலத்துக்கு மாற்றவும் கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
முன்னதாக தம்மை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற கோரும் பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய கோரி கொலீஜியத்துக்கு தஹில் ரமணி வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த வேண்டுகோள் நிராகரிக்கப்படுவதாகவும் கொலீஜியம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி ஏ.கே. மிட்டல்
1958-ம் ஆண்டு செப்டம்பர் 30-ல் சண்டிகரில் பிறந்தவர் அஜய்குமார் மிட்டல். 1977-ல் பட்டப் படிப்பையும் 1980-ல் சட்டப்படிப்பையும் முடித்து பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியை தொடங்கினார். 2004-ல் பஞ்சாப்- ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார் ஏ.கே. மிட்டல்.
கடந்த ஆண்டு மே 4-ந் தேதி முதல் ஜூன் 2-ந் தேதி வரை பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாகவும் ஏ.கே. மிட்டல் பணியாற்றினார். பின்னர் கடந்த மே மாதம் 28-ந் தேதி மேகாலயா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியானார் ஏ.கே. மிட்டல்.
தலைமை நீதிபதி தஹில் ரமணி
நாட்டின் உயர் நீதிமன்றங்களில் உள்ள மூத்த நீதிபதிகளில் ஒருவர் என்பதோடு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள இரண்டு பெண் நீதிபதிகளில் ஒருவர் தஹில் ரமணி. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வரும் நீதிபதி தஹில் ரமணி மும்பை உயர்நீதிமன்றத்தில் இரண்டுமுறை பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்துள்ளார்.
நீதித்துறை வரலாற்றில், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக வருவோர், அடுத்து, உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்று செல்வதுதான் வழக்கம். ஆனால், இதற்கு மாறாக, நாட்டில் உள்ள பெரிய உயர் நீதிமன்றங்களில் ஒன்றான சென்னையில் இருந்து, இரண்டே நீதிபதிகள் கொண்ட மேகாலயா மாநில உயர் நீதிமன்றத்திற்கு தஹில் ரமணி மாற்றப்பட்டுள்ளது நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications