இந்தியாவில் முதல் முறை! ஹைகோர்ட் நீதிபதியாகும் தன்பாலின ஈர்ப்பாளர்! யார் இந்த சவுரப் கிர்பால்?
டெல்லி: தன்பாலின ஈர்ப்பாளரான, வழக்கறிஞர் சவுரப் கிர்பாலை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்ய உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்து உள்ளது. இந்த பரிந்துரையை சட்ட அமைச்சகம் ஏற்கும் நிலையில் இந்தியாவில் முதல் தன்பாலின நீதிபதி என்ற பெயரை சவுரப் கிர்பால் பெறுவார்.
டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஒருமித்த பரிந்துரையின் பெயரில் உச்ச நீதிமன்ற கொலிஜியம் இந்த பரிந்துரையை மேற்கொண்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா, நீதிபதிகள் யு.யு லலித், ஏ.எம் கான் வில்கர் ஆகியோர் அடங்கிய கொலிஜியம் அமர்வு இந்த பரிந்துரையை மேற்கொண்டு உள்ளது.
இதற்கு முன் 4 முறை இவரின் பரிந்துரை மத்திய அரசு மறுத்தது. சவுரப் கிர்பால் தன்பாலின உறவு கொண்டவர் என்பது இதற்கு காரணமாக கூறப்படவில்லை.

எதிர்ப்பு இல்லை
இவர் தன் பாலின உறவு கொண்டவர் என்பதை அரசு வெளிப்படையாக எங்கும் எதிர்க்கவும் இல்லை ஆதரிக்கவும் இல்லை. கடந்த 2017ல் சவுரப் கிர்பால் பெயர் நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்ட போது அதை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போது அதற்கான காரணங்கள் சொல்லப்படவில்லை. ஆனால் அதற்கு அடுத்த வருடங்களில் மீண்டும் பரிந்துரை செய்யப்பட்ட போது பாதுகாப்பு காரணங்களை, உளவு காரணங்களை குறிப்பிட்டு சவுரப் கிர்பால் பெயர் நிராகரிக்கப்பட்டது.

காரணம்
அதன்படி இவரின் தன்பாலின உறவாளர் வெளிநாட்டை சேர்ந்த ஆண். இதனால் இவரின் நீதிபதி பணி உயர்விற்கு உளவுத்துறை எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டில் இந்த நியமனத்திற்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அரசு இவரின் நியமனத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் கடந்த வருடம் இது தொடர்பாக அரசிடம் கொலிஜியம் கூடுதல் விளக்கம் கேட்டது.

பாதுகாப்பு
அப்போது கூடுதல் விளக்கம் அளித்த மத்திய அரசு சவுரப் கிர்பாலின் பார்ட்னர் வெளிநாட்டை சேர்ந்தவர். அதோடு அவர் ஸ்விஸ் தூதரகத்தில் பணியாற்றுகிறார். இதனால் அவரை நீதிபதியாக நியமிப்பதில் பாதுகாப்பு ரீதியாக சிக்கல் இருப்பதாக அரசு விளக்கம் அளித்தது. மற்றபடி இவர் தன் பாலின உறவு கொண்டவர் என்பதற்காக மறுப்பு தெரிவிப்பதாக அரசு விளக்கத்தில் குறிப்பிடவில்லை.

மீண்டும் பரிந்துரை
இந்த நிலையில்தான் மீண்டும் தன்பாலின ஈர்ப்பாளரான வழக்கறிஞர் சவுரப் கிர்பாலை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்ய உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்து உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான பி என் கிர்பாலின் மகன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஆக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களில் சட்டப் படிப்பை முடித்தவர். இந்த பரிந்துரையை சட்ட அமைச்சகம் ஏற்கும் நிலையில் இந்தியாவில் முதல் தன்பாலின நீதிபதி என்ற பெயரை சவுரப் கிர்பால் பெறுவார்.












Click it and Unblock the Notifications