ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் ஜூபைருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்
டெல்லி: மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக உ.பி. போலீசார் தொடர்ந்த வழக்கில் ஆல்ட் நியூஸ் இணையதளத்தின் இணை நிறுவனர் முகம்மது ஜூபைருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.
போலி செய்திகளை சரிபார்த்து உண்மையை தெரிவிக்கும் இணையதளம் Alt news. இதன் இணை நிறுவனர் முகம்மது ஜூபைர். சில மாதங்களுக்கு முன்னர் இந்து சாமியார்கள் மாநாட்டில் யதி நரசிங்கானந்த், மஹந்த் பஜ்ரங் முனி, ஆனந்த் ஸ்வரூப் பேசிய பேச்சுகளை மேற்கோள்காட்டி வெறுக்கத்தக்கவர்கள் என தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் ஜூபைர். இது தொடர்பாக உ.பி. சீதாபூர் போலீசார் ஜூபைர் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்தனர்.

இந்நிலையில் 2020-ம் ஆண்டு ட்விட்டரில் பதிவிட்டது தொடர்பான விசாரணைக்காக டெல்லி போலீசில் ஆஜரானார் ஜூபைர். ஆனால் 2018-ம் ஆண்டு ட்விட்டரில் பதிவிட்ட ஒரு பதிவுக்காக ஜூபைர் கைடு செய்யப்பட்டார். அதாவது ஒரு ஹோட்டல் பெயர் மாற்றப்பட்டதை விமர்சிக்கும் வகையில் அப்பதிவு இருந்தது. அப்பதிவு மத உணர்வுகளைக் காயப்படுத்துகிறது என சிலர் புகார் கொடுத்திருந்தனர். அப்புகாரின் அடிப்படையில் ஜூபைர் கைது செய்யப்பட்டார்.
முகம்மது ஜூபைரின் கைது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. உண்மையை கூறும் ஒரு குரலை ஒடுக்க நினைத்தால் ஆயிரம் குரல்கள் உரத்து எழும் என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்தார். இவ்வழக்கில் ஜூபைரை போலீசார் கஸ்டடியில் எடுத்தும் விசாரித்திருந்தனர். இதனிடையே ஜூபைர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்து வந்தார்.
Recommended Video
இந்நிலையில் தமக்கு ஜாமீன் வழங்க கோரி உச்சநீதிமன்றத்தை நாடினார் ஜூபைர். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், உ.பி. சீதாபூர் வழக்கில் இன்று ஜூபைருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம். மேலும் புதிய ட்விட்டர் பதிவுகளை வெளியிடக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் ஜூபைருக்கு நிபந்தனை விதித்துள்ளது.












Click it and Unblock the Notifications