சாமியார்களின் ஹரித்வார் வன்முறை பேச்சு- உத்தரகாண்ட், டெல்லி அரசுகளுக்கு சுப்ரீம்கோர்ட் நோட்டீஸ்
டெல்லி: முஸ்லிம்களுக்கு எதிரான சாமியார்களின் ஹரித்வார் வன்முறை பேச்சு தொடர்பான வழக்கில் விளக்கம் கேட்டு உத்தரகாண்ட் மற்றும் டெல்லி மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை தர்ம சன்சத் என்ற பெயரில் சாமியார்களின் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்து சாமியார்கள் அல்லது அகோரிகளின் அமைப்புகளான அகாடாக்களின் தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.

இந்து பிரபாகரன் உருவாக வேண்டும்
இந்த கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான ஆயுதம் ஏந்த வேண்டும்; முஸ்லிம்களை இனப்படுகொலை செய்ய வேண்டும்; இந்துக்களைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்திய ஒரு பிரபாகரன் உருவாக வேண்டும்; ஒரு இந்து பிரபாகரனை உருவாக்கினால் ரூ1 கோடி பரிசு தரப்படும் என வன்முறை வெறியாட்டத்தைத் தூண்டும் வகையில் சாமியார்கள் பேசினர். இந்த பேச்சு நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
சாமியார்களின் இந்த பேச்சுகளுக்கு கண்டனம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க கோரியும் முன்னாள் பாதுகாப்பு படை தளபதிகள் எல். ராமதாஸ், அருண் பிரகாஷ், ஆர்.கே. தவன், எஸ்.பி தியாகி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் அனுப்பினர். மேலும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு இது தொடர்பாக 76 வழக்கறிஞர்கள் கடிதம் அனுப்பியிருந்தனர். இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி இருந்தனர். மேலும் மதவன்முறையை தூண்டும் வகையில் பேசிய சாமியார்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுநலன் மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

உத்தரகாண்ட், டெல்லி அரசுகளுக்கு நோட்டீஸ்
இந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரித்தது. மனுதாரர்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். கபில் சிபல் தமது வாதத்தில், தர்ம சன்சத் என்ற பெயரில் மேலும் சில இடங்களில் சாமியார்கள் மாநாடுகளை நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்த மாநாடுகள் நடைபெற உள்ளன. இம்மாநாடுகளுக்கு முன்னதாக ஏதேனும் நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து இவ்வழக்கில் விளக்கம் அளிக்க கோரி உத்தரகாண்ட் மற்றும் டெல்லி மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உத்தரகாண்ட் அரசு நடவடிக்கை
முன்னதாக ஹரித்வார் பேச்சுகள் தொடர்பாக 10க்கும் மேற்பட்ட சாமியார்கள் மீது உத்தரகாண்ட் அரசு வழக்கு பதிவு செய்தது. மேலும் இந்த வன்முறை பேச்சுகள் தொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவையும் உத்தரகாண்ட் மாநில அரசு நியமித்தது.












Click it and Unblock the Notifications