அமலாக்கத்துறைக்கு கடிவாளம்.. வழக்கறிஞர்களுக்கு சம்மன் அனுப்ப கூடாது! உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: குற்றம் சாட்டப்பட்டவருக்கு சட்ட அறிவுரைகளை வழங்கும் வழக்கறிஞர்களுக்கு தன்னிச்சையாக சம்மன் அனுப்பக்கூடாது என அமலாக்கத்துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
பிரபல மூத்த வழக்கறிஞர்களான அரவிந்த் தாதர் மற்றும் பிரதாப் வேணுகோபால் ஆகியோருக்கு கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. வழக்கறிஞர்களுக்கு தன்னிச்சையாக சம்மன் அனுப்பிய விவகாரம் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கில் இன்று தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி கே. வினோத் சந்திரன் மற்றும் நீதிபதி என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
உத்தரவில், "குற்ற வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞருக்கு சம்மன் அனுப்ப கூடாது. வழக்கறிஞருக்கும், அவரின் கட்சிக்காரருக்கும் இடையேயான உரையாடல்கள், ஆவண பரிமாற்றம் போன்ற தகவல் தொடர்பு ரகசியமானது. பிஎஸ்ஏ சட்டப்பிரிவு 132ன் படி இந்த உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், சட்டவிரோத செயல்களுக்கு திட்டம் தீட்டுவதாக அறியப்பட்டு அதற்கான ஆதாரங்கள் இருப்பின் சம்மன் அனுப்பலாம். இருப்பினும் சம்மன் காவல்துறை உயர் அதிகாரிகளின் ஒப்புதலுடன்தான் அனுப்ப வேண்டும். இந்த ஒப்புதலை எஸ்பி அந்தஸ்து அல்லது அதற்கும் உயர்வானவர்கள்தான் அளிக்க வேண்டும்.
இப்படி சம்மன் அனுப்பப்பட்டாலும் கூட, அதை பிஎன்எஸ்எஸ் சட்டப் பிரிவு 528ன் கீழ், நீதிமன்றத்தில் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வழக்கறிஞருக்கு உரிமை உண்டு. வழக்கறிஞர் வசம் உள்ள ஆவணங்களை சமர்பிக்க சொல்லி சம்மன் அனுப்பினால், வழக்கறிஞர் அந்த ஆவணங்களை நீதிமன்றத்தில் மட்டுமே சமர்பிக்க வேண்டும்.
இதுவே டிஜிட்டல் ஆவணங்கள் எனில், லேப்டாப், ஹார்ட் டிஸ்க் போன்ற ஆவணங்கள் எனில், அதை திறக்க சம்பந்தப்பட்ட கட்சிக்காருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அவர் கோரிக்கையை நிராகரிக்கும் பட்சத்தில் வழக்கறிஞர், மற்றும் கட்சிக்காரரின் முன்னிலையில்தான் ஆவணம் திறக்கப்பட வேண்டும். இப்படி செய்யும்போது வழக்கறிஞரின் மற்ற கட்சிக்காரர்களின் ஆவணங்கள் பாதுகாக்கப்படுவதை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications