காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை அமல்படுத்த கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
டெல்லி: காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரிய கர்நாடகாவின் மனுவை டிஸ்மிஸ் செய்த உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை அமல்படுத்துமாறு கர்நாடகாவுக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23 ஆவது கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் செப்டம்பர் 12 ஆம் தேதி வரை தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

ஆனால் இந்த உத்தரவுக்கு தமிழக அரசு பிரநிதிகள் எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்திலிருந்து வெளியேறினர். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி காவிரி மேலாண்மை கூட்டம் நடந்தது. அப்போது தமிழகத்தில் காவிரி டெல்டா பாசனத்திற்கு கர்நாடகா அணைகளில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கர்நாடகா அரசு திடீரென தண்ணீர் திறப்பதை நிறுத்தியது. இந்த நிலையில் 2 ஆவது கட்டமாக 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழுவானது காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரை செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
மேலும் கர்நாடகாவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. அதில் கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத வறட்சி கர்நாடகாவில் நிலவுவதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. இதனிடையே ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்த பிறகும் கர்நாடகா அரசு தண்ணீர் திறந்துவிட மறுப்பது குறித்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடுவதுதான் கடைசி முடிவு என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த 18-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் நடந்தது. அப்போது காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையின்படி தமிழகத்திற்கு மேலும் 15 நாட்களுக்கு 5000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன் தினம் தமிழகத்தை சேர்ந்த 12 எம்பிக்கள் காவிரி நீர் தொடர்பாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசினர்.
இந்த நிலையில் கர்நாடகா அரசு சார்பில் மாநில முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழு டெல்லியில் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தி காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக விவாதித்தனர். இந்த நிலையில் போதிய நீர் இல்லாததால் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி நீர் திறக்க இயலாது என்றும் காவிரியிலிருந்து 5000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரியும் கர்நாடகா அரசு சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இதனிடையே நேற்றைய தினம் காவிரி வழக்கு தொடர்பாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகியுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை நடத்தியிருந்தார். இந்த நிலையில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் கவாய், பிஎஸ் நரசிம்மா , பிகே மிஸ்ரா ஆகியோர் தலைமையிலான அமர்வில் விசாரணை தொடங்கியது.
தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, வில்சன், உமாபதி ஆகியோர் ஆஜராகினர். அப்போது தமிழக அரசு சார்பில் காவிரியில் சொற்ப நீரைத்தான் கர்நாடகா திறந்து விடுகிறது. 12,500 கன அடிநீரை கர்நாடகா திறக்க உத்தரவிட வேண்டும் என்றார்.
அப்போது கர்நாடகா அரசு வழக்கறிஞர், கர்நாடகாவில் மழை இல்லை, காவிரியில் நீரும் குறைவாக இருக்கிறது என்றார். அதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான ரோத்தகி, கர்நாடகாவில் மழை குறைவுதான் என்பதை ஏற்கிறோம். மழை குறைவான காலத்துக்கான நீர் பகிர்வு விவரம் ஏற்கனவே உள்ளது. அதை நீதிமன்றமும் வரையறுத்துள்ளது. அந்த நீரை கூட திறக்கவில்லையே என தமிழ்நாடு அரசு கேள்வி எழுப்பியுள்ளது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தனர். அதே போல் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க கர்நாடகா அரசின் கோரிக்கையும் நிராகரித்தனர். வறட்சி கால அட்டவணைப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications