ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கு.. டிச.11-க்கு ஒத்திவைப்பு
டெல்லி: தமிழக முதல்வருக்கு எதிராக வாக்களித்ததாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட 11 பேர் தகுதி நீக்க வழக்கை வரும் டிசம்பர் 11-க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தமிழக முதல்வருக்கு எதிராக செயல்பட்டதாக கூறி தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி அரசின் மீது நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். அதனை எதிர்க்கும் விதமாக தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய கோரி சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது.
ஆதரவாளர்கள்
இதையடுத்து திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சக்கரபாணி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதேபோல் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் வெற்றிவேல், தங்கதமிழ்செல்வன் உள்ளிட்டோரும் மேல்முறையீடு செய்தனர்.
காரசாரமான விவாதம்
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஏகே.சிக்ரி, அசோக் பூஷன், அப்துல் நசீர் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் காரசாரமாக வாதிட்டார்.
உத்தரவிட வேண்டும்
இதில் சபாநாயகர் தனபால் அரசியல், கட்சி பேதமின்றி சரியான நடவடிக்கையை எடுத்திருந்தால் அதிமுக தற்போது ஆட்சியில் இருந்திருக்காது. ஏனெனில் அவர்களுக்கு பெரும்பான்மை என்பது கண்டிப்பாக கிடையாது. அதனால் துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும்.
11 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
மேலும் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தான் ஒரு சரியான முடிவை தெரிவிக்க வேண்டும் என நேற்றைய விசாரணையின் போது திமுக தரப்பில் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வாதிடப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 11ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.