மதுபான கொள்கை ஊழல் வழக்கு: மணிஷ் சிசோடியா கைது விவகாரத்தில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு!
மணிஷ் சிசோடியா கைது விவகாரத்தில் தலையிட மறுத்துவிட்டது உச்சநீதிமன்றம்.
டெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்ட விவகாரத்தில் தலையிட உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையிடுவதற்கும் உச்சநீதிமன்றம் மணிஷ் சிசோடியாவுக்கு அறிவுறுத்தியுள்ளது.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு உள்ளது. ஆம் ஆத்மி அரசின் துணை முதல்வராக மணிஷ் சிசோடியா பதவி வகித்து வருகிறார்.

டெல்லி அரசானது 2021-22-ம் ஆண்டுக்கான புதிய மதுபான கொள்கையை உருவாக்கி செயல்படுத்தியது. இந்த மதுபான கொள்கை பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியதால் கைவிடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. டெல்லியை 32 மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திலும் 27 மதுபான கடைகள் வைக்க அனுமதிப்பது என முடிவெடுக்கப்பட்டது. தனியார் மதுபான கடைகளுக்கு மட்டுமே இந்த மதுபான கொள்கை அனுமதி வழங்கியது.
ஆகையால் இந்த மதுபான கொள்கை உருவாக்கத்தில் ஊழல் முறைகேடு நடந்தது என்பது சிபிஐ வழக்கு. இது தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இவ்வழக்கு தொடர்பாக ஏற்கனவே மணிஷ் சிசோடியா வீட்டில் ரெய்டும் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் மணிஷ் சிசோடியாவிடம் துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டது. பல மணிநேரம் நீடித்த இந்த விசாரணையின் முடிவில் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். மேலும் சிபிஐ 5 நாட்கள் மணிஷ் சிசோடியாவை காவலில் எடுத்து விசாரிக்கவும் நீதிமன்றம் அனுமதித்தது. அதேநேரத்தில் அவரது கைதுக்கு எதிராக நேற்று ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டங்களை நடத்தினர்.

இதனிடையே தமது கைதுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மணிஷ் சிசோடியா வழக்கு தொடர்ந்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச் முன்பாக, மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனுசிங்வி இந்த வழக்கு தொடர்பாக தெரிவித்தார். இவ்வழக்கை உடனே விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், இன்று மாலை 3.50 மணிக்கு மணிஷ் சிசோடியா வழக்கை விசாரிப்பதாக தெரிவித்தார்.
இதனடிப்படையில் இன்று மாலை நடைபெற்ற விசாரணையின் போது, டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடாமல் ஏன் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ய வேண்டும்? இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம் என அறிவுறுத்தியது உச்சநீதிமன்றம்.












Click it and Unblock the Notifications