பாலியல் வழக்கு.. தருண் தேஜ்பால் மனு தள்ளுபடி- 6 மாதத்தில் விசாரித்து முடிக்க உத்தரவு
டெல்லி: தம் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்யக் கோரி டெஹல்கா ஊடக நிறுவனரும் அதன் முன்னாள் ஆசிரியருமான தருண் தேஜ்பால் தாக்கல் செய்த மனுவை உச்சநிதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. மேலும் தருண் தேஜ்பாலுக்கு எதிரான வழக்கின் விசாரணயை 6 மாதங்களுக்குள் முடிக்கவும் கோவா நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புலனாய்வு ஊடகங்களில் புதிய பாய்ச்சலை வெளிப்படுத்தியது டெஹல்கா ஊடகம். அரசியல்வாதிகளின் நிஜ ஊழல் முகங்களை அம்பலப்படுத்தியதால் டெஹல்கா ஊடகம் பெரும் பரபரப்புகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் 2013-ம் ஆண்டு பாலியல் வழக்கில் தருண் தேஜ்பால் கைது செய்யப்பட்டார். தமது நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஊழியரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி தருண்தேஜ்பால் நடந்து கொண்டார் என்பது வழக்கு.
கோவா ஹோட்டல் ஒன்றின் லிப்ட்டில் இச்சம்பவம் நடந்தது என்பதும் புகார். இது தொடர்பாக கோவா கீழ்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கில் 2014-ல் தருண் தேஜ்பால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து தம் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தருண் தேஜ்பால் மனுத் தாக்கல் செய்தார்.
இம்மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், தருண் தேஜ்பாலின் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் அவர் மீதான வழக்கை 6 மாதங்களில் விசாரித்து முடிவுக்கவும் கோவா கீழ்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications