ஐஎன்எக்ஸ் ஈடி வழக்கு.. ப.சிதம்பரத்திற்கு செப். 5 வரை முன்ஜாமீன்.. உச்ச நீதிமன்றம் அதிரடி
Recommended Video
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் செப்டம்பர் 5ம் தேதி வரை முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டார். கடந்த வாரம் சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்தனர். அவர் கைது செய்யப்பட்டு இன்றோடு 9 நாட்கள் முடிய போகிறது.
இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் ப .சிதம்பரத்திற்கு பெயில் வழங்க முடியாது என்று கூறினார். சிபிஐ நீதிமன்றம் இவருக்கு இரண்டு முறை பெயில் வழங்க மறுத்தது.
டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் ப. சிதம்பரத்தை முதலில் ஐந்து நாள் காவலில் எடுக்க உத்தரவு பிறப்பித்தது. அதன்பின் மீண்டும் ப. சிதம்பரத்திற்கு ஐந்து நாட்கள் காவல் நீட்டிக்கப்பட்டது. ப. சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட காவல் நாளையோடு முடிகிறது.
இந்த நிலையில் ப. சிதம்பரம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி டெல்லி ஹைகோர்ட் உத்தரவின் பெயரில் சிபிஐ ப. சிதம்பரத்தை காவல் எடுத்ததே தவறு. அவருக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்னொரு மனுவில் அமலாக்கத்துறை ப. சிதம்பரத்தை கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என்று முன் ஜாமீன் கோரப்பட்டுள்ளது. இதில் அமலாக்கத்துறை வழக்கில் மட்டும் தினமும் ப. சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் சிபிஐ வழக்கில் இன்னும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த இரண்டு மனுக்கள் மீது இன்றும் விசாரணை நடக்க உள்ளது. ப.சிதம்பரம் சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் மற்றும் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் வாதம் ஏற்கனவே செய்தனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர். பானுமதி, போபன்னா ஆகியோர் வழக்கை விசாரித்து வருகிறார்கள்
அதேபோல் ப. சிதம்பரத்திற்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வாதம் நேற்று நடந்தது. அவர்கள் தொடர்ந்து இன்றும் வாதம் செய்தனர். ஐஎன்எக்ஸ் வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ சார்பாக சொலீஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜர் ஆகி வாதாடினார்.
துஷார் மேத்தா தனது வாதத்தில், ப. சிதம்பரத்திற்கு சலுகைகள் வழங்க கூடாது. ப. சிதம்பரத்திற்கு சலுகைகள் கொடுத்தால் அது தவறான முன்னுதாரணமாக மாறும். விஜய் மல்லையா போன்றவர்களுக்கு ப. சிதம்பரம் வழக்கு உதாரணமாக மாற கூடாது.
கத்தியால் ஒருவரை குத்துவது எப்படி குற்றமோ அப்படிதான் இதுவும். அது தனி மனித தாக்குதல்: இது தேசத்தின் மீதான தாக்குதல். ப. சிதம்பரம் சார்பாக இதில் வாங்கப்பட்ட லஞ்சம் எல்லாம் வெள்ளைப்பணமாக மாற்றப்பட்டுள்ளது. கருப்பு பண முறைகேடு பெரிதாக நடந்துள்ளது, என்று சிபிஐ தரப்பு வாதம் வைத்துள்ளது.
அதன்பின் ப. சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் தனது வாதத்தை செய்தார். அதில்,சிபிஐ அமைப்பிற்கு ப. சிதம்பரத்தை கைது செய்ய உரிமை இருக்கிறது. அவர்கள் கண்டிப்பாக ப. சிதம்பரத்தை கைது செய்யலாம். ஆனால் ஒரே ஒரு ஆதாரமாவது அவருக்கு எதிராக இருக்கிறதா உங்களிடம்?சிபிஐ எதன் அடிப்படையில் ப. சிதம்பரத்தை கைது செய்தனர்.
எந்த ஆதாரமும் இல்லாமல் அவர்கள் ப. சிதம்பரத்தை கைது செய்துள்ளனர். ப. சிதம்பரம் வழக்கை டெல்லி ஹைகோர்ட் வித்தியாசமாக அணுகி உள்ளது. விசாரணை முடிந்த பின்பே கேஸ் டைரியை நீதிமன்றத்தில் சிபிஐ சமர்ப்பித்தது, என்று ப. சிதம்பரம் வாதம் செய்தது.
இந்த நிலையில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் செப்டம்பர் 5ம் தேதி வரை முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்துள்ளது. செப்டம்பர் 5ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும்.