மாஜி அமைச்சர் பா.வளர்மதி ’ஹேப்பி’- நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சூமோட்டோ விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை
டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் சூமோட்டோ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது.
2001-2006-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் பா.வளர்மதி. இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 2012-ம் ஆண்டு வளர்மதி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த விடுதலை உத்தரவை மறு ஆய்வு செய்ய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி தாமாக முன்வைந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். இந்த வழக்கில் பா. வளர்மதி தரப்பினர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். இதனையடுத்து வழக்கின் விசாரணை வரும் 27-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதனிடையே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை விசாரிக்க தடை கோரி பா.வளர்மதி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹரிரிகேஷ் ராய் மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா பெஞ்ச் விசாரித்தது. இந்த விசாரணையின் போது, பா.வளர்மதியை வழக்கில் இருந்து விடுதலை செய்து 10 ஆண்டுகளாகிவிட்டது. 10 ஆண்டுகளுக்குப் பின்னர் வழக்கு மறு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதுவும் லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நேரத்தில் வழக்கை விசாரணைக்கு எடுப்பது பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும் என வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இதனையடுத்து பா.வளர்மதி விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹரிரிகேஷ் ராய் மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா பெஞ்ச் இடைக்கால தடை விதித்தது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை தேதி குறிப்பிடாமலும் ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.
தற்போதைய அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆகியோர் வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை தீர்ப்பையும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் 'சூமோட்டாவாக' விசாரித்து வருகிறார். அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பையே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழங்க இருக்கிறார். தற்போது உச்சநீதிமன்றம் அளித்த தடை பிற வழக்குகளுக்கும் பொருந்துமா? என்பது திங்கள்கிழமையன்று தெரியவரும்.












Click it and Unblock the Notifications