சிபிஐ விசாரிக்க தடை கோரி எடப்பாடி பழனிச்சாமியின் மனு மீது ஜூலை 11 இல் சுப்ரீம் கோர்ட் விசாரணை
டெல்லி: தன்னை சிபிஐ விசாரிக்க தடை கோரி எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனு வரும் 11 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு திமுக முதன்மை செயலாளர் ஆர் எஸ் பாரதி லஞ்ச ஒழிப்புத் துறையில் ஒரு புகார் அளித்தார். அதில் தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் ரூ 4800 கோடி மதிப்பிலான 5 நெடுஞ்சாலை திட்ட பணிகள் தொடர்பான ஒப்பந்தங்களை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவருடைய உறவினர்களுக்கு முறைகேடாக அளித்துள்ளார்.
இந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியதிலும் முறைகேடு நடந்ததாக ஆர் எஸ் பாரதி தெரிவித்திருந்தார். இதையடுத்து 2018ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர் எஸ் பாரதி வழக்கு தொடர்ந்தார்.

எடப்பாடி பழனிச்சாமி
அந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தேவைப்பட்டால் எடப்பாடி பழனிச்சாமியிடம் சிபிஐ விசாரணை நடத்தலாம். வழக்குப் பதிவும் செய்து கொள்ளலாம் என தெரிவித்திருந்தது.

இபிஎஸ் மேல்முறையீடு
இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமியை சிபிஐ விசாரிக்க கடந்த 2018 ஆம் ஆண்டு இடைக்கால தடை விதித்திருந்தது. மேலும் இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தது.

4 ஆண்டுகள்
இந்த நிலையில் சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கானது வரும் திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஜூலை 11 ஆம் தேதி அதிமுகவின் பொதுக் குழு நடைபெறுகிறது. இது தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் ஹைகோர்ட் தீர்ப்பளிக்கிறது.
Recommended Video

11 ஆம் தேதி யாருக்கு சாதகம்
அதே ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி மீதான சிபிஐ விசாரணை வழக்கும் விசாரணைக்கு வருகிறது. இரு வழக்குகளும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே ஜூலை 11 ஆம் தேதி யாருக்கு சாதகமாக அமைய போகிறது என தெரியவில்லை.












Click it and Unblock the Notifications