பெகாசஸ் ஒட்டு கேட்பு வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு- வல்லுநர் குழு அறிவிக்கப்படும்?
டெல்லி: பெகாசஸ் மென்பொருள் மூலம் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டது தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரத்தை விசாரிக்கும் வல்லுநர் குழு நாளை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் உருவாக்கிய மென்பொருள் பெகாசஸ். பயங்கரவாதிகளின் செல்போன்களை அரசுகள் ஒட்டு கேட்டு சதித் திட்டங்களை முறியடிக்க இந்த மென்பொருள் வழங்கப்பட்டது.
ஆனால் உலகின் பல நாடுகளில் அரசியல் ரீதியான ஒட்டு கேட்புக்கு பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தப்பட்டதால் சர்ச்சை வெடித்தது. இந்தியாவில் பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் என 300க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் இதேபோல் ஒட்டு கேட்கப்பட்டதும் அம்பலமானது.

நாடாளுமன்றத்தை முடக்கிய கட்சிகள்
இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கின. ஆனால் மத்திய அரசு பட்டும் படாமலும் பதிலளித்தது. இதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ராஜ்யசபாவில் பெகாசஸ் தொடர்பான மத்திய அமைச்சர் அறிக்கையை திரிணாமுல் எம்.பி. பிடுங்கி கிழித்து எறிந்தனர்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
அத்துடன் பெகாசஸ் மூலம் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பத்திரிகையாளர் என். ராம் உட்பட 9 பேர் வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்குகளை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. இந்த விசாரணையின் போது மத்திய அரசு தரப்பில் விரிவான பிரமாணம் தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவை ஏற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய முடியாது என மத்திய அரசு மறுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.

மத்திய அரசு பிடிவாதம்
பெகாசஸ் விவகாரம் நாட்டின் பாதுகாப்பு தொடர்புடையது; ஆகையால் உச்சநீதிமன்றத்தில் அந்த விவகாரத்தை பகிரங்கப்படுத்த முடியாது என மத்திய அரசு தெரிவித்தது. இதனை நிராகரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, பாதுகாப்பு விவகாரங்களில் நாங்கள் தலையிடவில்லை. செல்போன்கள் ஒட்டு கேட்பு தொடர்பாக வழக்குகள் தொடர்ந்துள்ளனர். மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்று அதன் மீது உரிய விளக்கம் அளித்தான் கூறுகிறோம் என்றார். ஆனாலும் மத்திய அரசு பிடிவாதம் காட்டியது.

உச்சநீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு
இதனைத் தொடர்ந்து பெகாசஸ் மூலம் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரத்தில் வல்லுநர் குழு ஒன்றை அமைக்க முடிவு செய்திருப்பதாக உச்சநீதிமன்றம் கடந்த மாதம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் நாளை வழங்க உள்ளது. உச்சநீதிமன்றம் நாளை வல்லுநர் குழுவில் யார் யார் இடம்பெறுவார்கள் என்ற அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த வல்லுநர் குழுவின் விசாரணைக்கான கால அவகாசமும் நிர்ணயிக்கப்படக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications