ஏப்ரல் 19 லோக்சபா தேர்தல்.. மே 22 வாக்கு எண்ணிக்கையா? தேர்தல் ஆணையம் கொடுத்த பரபர விளக்கம்
டெல்லி: லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் மார்ச் 13 ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அன்றைய தினம் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வர இருப்பதாகவும் வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி பரவி வரும் நிலையில் தேர்தல் ஆணையம் இதனை மறுத்துள்ளது.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 2- வது வாரத்தில் தேர்தல் தேதி வெளியாகும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தேர்தல் முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், தமிழகத்தில் லோக்சபா தேர்தல் தயார் நிலை குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் இரண்டு நாட்கள் ஆலோசனை நடத்தினார்.

இவ்வாறாக தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள், தேர்தல் முன்னேற்பாடுகளை மெற்கொண்டு வருகிறார்கள். லோக்சபா தேர்தல் எப்போது நடத்தப்படும் எத்தனை கட்டங்களாக நடைபெறும்.. தேர்தல் முடிவு என்று வெளியாகும் என்பது குறித்து நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தேர்தல் தேதி எனக் கூறி சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வதந்திகளும் கிளப்பி விடப்படுகின்றன.
இந்த நிலையில், லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் மார்ச் 13 ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அன்றைய தினம் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வர இருப்பதாகவும் வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி பரவியது. தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது போலவே தென்பட்ட இந்த மெசேஜை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்தனர்.
இந்த நிலையில், தேர்தல் ஆணையம் இது குறித்த விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில், "தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்புகள் செய்தியாளர்கள் சந்திப்பு வழியாகவே வெளியிடப்படும். வாட்ஸ் அப் மெசேஜ் வாயிலாகவோ, வேறு சமூக வலைத்தளங்கள் வாயிலாகவோ வெளியிடப்படாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications