பயம் காட்டிய மம்தா.. தேர்தல் ஆணையம் போட்ட புது உத்தரவு! மேற்கு வங்கத்தில் சலசலப்பு!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கும் நிலையில், மே.4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில், மின்னணு வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் அறையில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியிருந்தார். இதனையடுத்து பாதுகாப்பை பலப்படுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
மத்திய கொல்கத்தாவின் குதிராம் அனுஷிலன் கேந்திரா மற்றும் நேதாஜி இண்டோர் ஸ்டேடியம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்புத் திரைகளை திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் குணால் கோஷ் மற்றும் சஷி பாஞ்சா கவனித்துக் கொண்டிருந்தனர். பாதுகாப்பு அறைகளுக்குள் (Strong Rooms) தேர்தல் முகவர்கள் அல்லது வேட்பாளர்கள் இல்லாத நேரத்தில், சில நபர்கள் உள்ளே இருப்பதைக் கண்டனர்.

அந்த நபர்கள் அங்கிருந்த பெட்டிகளைத் திறப்பதும், அதிலிருந்த காகிதங்களை எடுப்பதும் கண்காணிப்புத் திரையில் தெரிந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த வேட்பாளர்கள், வெளிநபர்கள் புகுந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சிதைக்கவும், தபால் வாக்குகளை மாற்றவும் முயற்சிப்பதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் மறுத்தது. உள்ளே இருந்தவர்கள் வெளிநபர்கள் அல்ல என்றும், அவர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ ஊழியர்கள் என்று விளக்கமளித்திருந்தது.
இந்த விவகாரம் பெரியதாக வெடித்த நிலையில், நேற்றிரவு முதல்வர் மம்தா பானர்ஜி பவானிபூர் தொகுதிக்கான பாதுகாப்பு அறைக்குச் சென்று, ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் ஆணையமும் பாஜக-வும் கைகோர்த்துக்கொண்டு, வேட்பாளர்களின் பிரதிநிதிகள் இல்லாத நேரத்தில் வாக்கு பெட்டிகளைத் திறக்க முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார். மட்டுமல்லாது அவர் 4 மணி நேரத்திற்கும் மேலாக அங்கேயே தங்கி நேரடியாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டார்.
இதனையடுத்து, நேதாஜி இண்டோர் ஸ்டேடியம் உள்ளிட்ட முக்கிய வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரச்சனை மேலும் பெரியதாக வெடிக்காமல் இருப்பதற்காக, இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
மேற்கு வங்கத்தில் தொடர்ந்து சலசலப்புகள் ஏற்பட்டு வருவதால், தேர்தல் ரிசல்ட் வரை அங்கு பதற்றம் குறையாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications