அமித்ஷாவுக்கு உயர் மட்ட பாதுகாப்பு.. ராஜ்நாத் சிங்குக்கு ராணுவ பாதுகாப்பு!
Recommended Video
டெல்லி: உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது, அதோடு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு ராணுவ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற அமித்ஷாவுக்கு உள்துறை அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதோடு அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவைக் குழுக்கள் அனைத்திலும் அமித்ஷா இடம் பெற்றுள்ளார். இப்போது மோடியின் அமைச்சரவையில் மோடிக்கு அடுத்தபடியாக அதிக முக்கியத்துவம் பெற்றுள்ள நபர் அமித்ஷா என்பதால் அவருக்கான பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

டெல்லி போலீசார் அவருக்கான பாதுகாப்பு பணியை செய்து வருகின்றனர். ஏற்கனவே இசட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கும் அவருக்கு மேலும் பாதுகாப்பு அதிகரிகப்பட்டுள்ளதால் அவரது வீட்டில் பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அமித்ஷாவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள அதே வேளையில் அவர் தற்போது வசித்து வரும் வீட்டில் இருந்து மாற உள்ளார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வசித்து வந்த வீட்டில் அமித்ஷா இப்போது குடியேற உள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக அமித்ஷா வீடு மாற உள்ளார் என்று டெல்லி போலீசார் கூறுகின்றனர். அந்த வீட்டில் டெல்லி போலீசார் மற்றும் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த கருப்பு பூனை படையும் பாதுகாப்பு அளிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த மத்திய அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங்குக்கு இம்முறை பாதுகாப்புத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு டெல்லி போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில் அவருக்கு ராணுவ பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. அவரது வீட்டுக்கு ராணுவம் வரும் வரை டெல்லிப் போலீசார் அவரது பாதுகாப்பு பணியில் தொடருவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications