தேசிய பாதுகாப்பு படை இயக்குநராக சீனியர் ஐபிஎஸ் அதிகாரி சீனிவாசன் நியமனம்.. யார் இவர்?
டெல்லி: தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) பிரிவின் இயக்குநர் ஜெனரலாக 1992 பேட்ச் மூத்த ஐபிஎஸ் அதிகாரி சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். என்.எஸ்.ஜி இயக்குநராக செயல்பட்ட நளின் பிரசாத் அண்மையில் ஜம்மு காஷ்மீர் சிறப்புக் காவல்துறை இயக்குநராக மாற்றப்பட்ட நிலையில், தேசிய பாதுகாப்புப் படைக்கு புதிய இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கடத்தல் தடுப்புப் படையான தேசிய பாதுகாப்புப் படை 1984 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1984 ஆம் ஆண்டு ஆபரேஷன் புளூ ஸ்டார், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையாக NSG அமைக்கப்பட்டது.

தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) பிரிவின் இயக்குநராக 1992 பேட்ச் ஆந்திரா கேடர் ஐபிஎஸ் அதிகாரி நளின் பிரபாத் பொறுப்பு வகித்து வந்தார். இவரை ஜம்மு & காஷ்மீரின் சிறப்புக் காவல்துறை இயக்குநராக மத்திய அரசு மாற்றம் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து அவர் ஜம்மு & காஷ்மீரின் சிறப்புக் காவல்துறை இயக்குநராக பொறுப்பேற்று கொண்டார்.
இதையடுத்து, மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) தலைமை இயக்குநர் அனீஷ் தயாள் சிங்கிடம், என்.எஸ்.ஜி தலைமை இயக்குநர் பதவி கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், என்எஸ்ஜியின் புதிய இயக்குநராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி சீனிவாசன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
என்எஸ்ஜியின் புதிய இயக்குநராக 1992 பேட்ச் பீகார் கேடர் மூத்த ஐபிஎஸ் அதிகாரி சீனிவாசனை நியமனம் செய்ய மத்திய அமைச்சரவையின் பணி நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, என்எஸ்ஜி தலைவராக சீனிவாசன் பதவியேற்க உள்ளார்.
1992 பேட்ச் பீகார் கேடர் ஐபிஎஸ் அதிகாரியான சீனிவாசன் தற்போது ராஜ்கிரில் உள்ள பீகார் காவல்துறை அகாடமியின் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். இவர், விரைவில் என்.எஸ்.ஜி தலைமை இயக்குநராக பொறுப்பேற்க இருக்கிறார். சீனிவாசன் பணி ஓய்வு பெறும் நாளான ஆகஸ்ட் 31, 2027 வரை இந்த பதவியில் நீடிப்பார் என்று மத்திய பணியாளர் அமைச்சகம் தெரிவித்து உள்ளது.













Click it and Unblock the Notifications