அப்போ நீதிபதிகளை விட எம்எல்ஏக்களுக்கு சம்பளம் அதிகமா? செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி கலகல
டெல்லி: நீதிபதிகளுக்கு கிடைக்கும் ஊதியத்தை விட தமிழக எம்எல்ஏக்களுக்கான ஊதியம் அதிகமா என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி ஓகா நகைச்சுவையாக கேள்வி எழுப்பினார். அதற்கு அமலாக்கத் துறை வழக்கறிஞரும் எம்எல்ஏவுக்கான ஆண்டு வருமானத்தை தெரிவித்திருந்தார்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். அதில் செந்தில் பாலாஜியின் வீட்டிலிருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாகவும் அதில் அவருக்கு எதிரான ஆதாரங்கள் இருப்பதாகவும் அமலாக்கத் துறை வாதிட்டு வந்தது.

இந்த நிலையில் தன்னை கைது செய்த போது அது போன்ற சில ஆவணங்களை அமலாக்கத் துறை குறிப்பிடாத நிலையில் இப்போது மட்டும் எங்கிருந்து அந்த ஆதாரங்கள் வரும் என செந்தில் பாலாஜி தரப்பு கேள்வி எழுப்பியிருந்தது.
அதிலும் முக்கியமாக போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ 67 கோடியை செந்தில் பாலாஜி மோசடி செய்ததற்கான ஆதாரம் அவருடைய வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பென் டிரைவில் இருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அந்த ஆதாரத்தை காட்டுமாறு அமலாக்கத் துறை உத்தரவிடக் கோரி செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் ஓகா மற்றும் மாஷி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜியின் வங்கிக் கணக்கிற்கு பணமாக வரவு வைக்கப்பட்ட ரூ 1.34 கோடி ரூபாய் என்பது எம்எல்ஏவாக தனக்கு கிடைத்த ஊதியம் என்றும் விவசாயத் துறை மூலம் தனக்கு கிடைத்த வருமானம் என்றும் செந்தில் பாலாஜி, அமலாக்கத் துறையிடம் தெரிவித்திருந்தார்.
ஆனால் இதை அமலாக்கத் துறை ஏற்க மறுக்கிறது. அதாவது 1.34 கோடியில் 68 லட்சம் எம்எல்ஏவாக இருந்ததால் தனக்கு கிடைத்த ஊதியம் என்றும் மீதமுள்ள பணம் எனது விவசாய நிலத்தின் மூலம் கிடைத்த வருவாய் என்றும் அவர் கூறியிருப்பது பொய் என அமலாக்கத் துறை தெரிவிக்கிறது.
இது குறித்து அமலாக்கத் துறை வழக்கறிஞர் சோயப் ஹுசைன் தனது வாதத்தில் கூறியிருப்பதாவது: ரூ 1.34 கோடிக்கான கணக்கை செந்தில் பாலாஜி சொல்வது முற்றிலும் தவறு. அவருடைய வங்கிக் கணக்கில் எம்எல்ஏவாக இருப்பதற்கான ஊதியம் என்பது பணமாக கொடுக்கப்படாமல் டிஜிட்டல் முறையில் வங்கி பரிமாற்றம் மூலம் அனுப்பப்படுகிறது.
எனவே அவருடைய ஊதியத்திற்கு அவர் சொல்லும் ரூ 68 லட்சம் கணக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை. எம்எல்ஏக்களுக்கு ஊதியம் பணமாக வழங்கப்படவில்லை. தேர்தலில் போட்டியிட்ட போது அவர் தனது வேட்புமனுவில் சொத்து விவரங்களை குறிப்பிட்ட போது அந்த பணம் குறித்து எதையும் குறிப்பிடாமல் தற்போது மட்டும் அது விவசாயத்தில் கிடைத்த வருமானம் என எப்படி கோர முடியும்? என வழக்கறிஞர் சோயப் கேள்வி எழுப்பியிருந்தார்.
அப்போது குறுக்கிட்ட செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ரூ 1.34 கோடி பணம் செந்தில் பாலாஜியின் ஊதியமும் விவசாயத்தில் வந்த வருமானமும்தான். வேலை வாங்கித் தருவதாக அவர் பணம் பெற்றதற்கான ஆதாரம் இருப்பதாக அமலாக்கத் துறை கூறுகிறார்கள். ஆனால் அதற்கான எந்த ஆதாரமும் அவரது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட பென் டிரைவிலோ அல்லது ஹார்ட் டிஸ்கிலோ இல்லை என்றார்.
கடந்த முறையே பென் டிரைவில் இருக்கும் அந்த ஆதாரத்தை காட்டுமாறு அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். ஆனால் நேற்றும் அதை சமர்ப்பிக்காமல் வாய்தா கேட்ட போதுதான் நீதிபதிகள், "எத்தனை முறைதான் வாய்தா கேட்பீர்கள் " என அமலாக்கத் துறைக்கு கண்டனத்தை தெரிவித்திருந்தார்.
அந்த ஆதாரத்தில்தான் ரூ 67.74 கோடி பணத்தை போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதற்காக பலரிடம் செந்தில் பாலாஜி பெற்றதாக தகவல்கள் இருக்கின்றன என அமலாக்கத் துறை சொல்கிறது. அதற்கு முகுல் ரோத்தகி, செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வழங்கும் ஆணையத்தில் இல்லாத போது அவரால் எப்படி போஸ்டிங் போட முடியும், அதற்காக பணத்தை வாங்க முடியும்? என கேட்டார்.
அதற்கு சோயப், "இந்த வேலை வாங்கி தரும் விவகாரம் குறித்து செந்தில் பாலாஜிக்கு நிறைய மெயில்கள் வந்துள்ளன. அவற்றை நான் காட்டுகிறேன். அது மட்டுமல்லாமல் ரூ 1.34 கோடி, செந்தில் பாலாஜியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது குறித்தும் சோயப் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் அது எம்எல்ஏவாக இருந்ததற்கான ஊதியம் என்றும் விவசாய ஊதியம் என்றும் செந்தில் பாலாஜி பொய் சொல்வதாக சோயப் தெரிவித்திருந்தார்.
அப்போது நீதிபதி ஓகா, " நீதிபதிகளை காட்டிலும் எம்எல்ஏவின் ஊதியம் அதிகமாக இருக்குமா?" என கேட்டார். அதற்கு சோயப் , ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாயை எம்எல்ஏக்கள் ஊதியமாக பெறுகிறார்கள் என்றும் ஊக்கத்தொகைகள் தனியாக கிடைக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
ரூ 1.34 கோடி வரவு வைக்கப்பட்ட விவகாரத்தில் சல்லானில் எந்த தகவல்களும் இல்லை, இத்தனை பெரிய தொகையை பான் எண், முகவரி உள்ளிட்டவை இல்லாமல் எப்படி வரவு வைக்க முடியும் என்றும் சோயப் கேள்வி எழுப்பியிருந்தார்.












Click it and Unblock the Notifications