நிஜமா இதுதான் பெஸ்ட்! எந்த நாடும் செய்யாததை மோடி அரசு செய்துள்ளது! திடீரென பாராட்டி தள்ளிய சசி தரூர்
டெல்லி: தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு வெற்றிகரமாக நடந்த முடிந்துள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற 18வது ஜி20 உச்சி மாநாட்டில் டெல்லி பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது சர்வதேச அளவில் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

இதற்காக இந்தியாவைப் பலரும் பாராட்டி வரும் நிலையில், காங்கிரஸ் எம்பி சசி தரூரும் இதற்காக மத்திய அரசைப் பாராட்டி இருக்கிறார். இது சந்தேகமே இல்லாமல் இந்தியாவிற்குக் கிடைத்த ராஜதந்திர வெற்றி என்று சசி தரூர் பாராட்டி இருக்கிறார்.
சசி தரூர்: செல்லி பிரகடனத்தில் அனைத்து உறுப்பு நாடுகளையும் ஒருமித்த கருத்துக்குக் கொண்டு வந்ததற்கும் அவர் மோடி அரசைப் பாராட்டினார். அதேநேரம் ஜி 20 உச்சி மாநாட்டிலும் மோடி அரசு அரசியல் செய்ததாகச் சாடிய அவர், கார்கேவை அரசு விருந்துக்கு அழைக்காததை விமர்சித்தார்.
உச்சி மாநாட்டின் முதல் நாளான சனிக்கிழமை டெல்லி பிரகடனத்தில் அனைத்து நாடுகளுக்கும் ஒருமித்த கருத்து ஏற்பட்டிருப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இது சர்வதேச அளவில் முக்கியமான விஷயமாகப் பார்க்கப்பட்டது.
வெற்றி: இதற்கிடையே இது குறித்து சசி தரூர் கூறுகையில், "டெல்லி பிரகடனம் சந்தேகத்திற்கு இடமின்றி இந்தியாவிற்குக் கிடைத்த ராஜதந்திர வெற்றியாகும். இது ஒரு மகத்தான சாதனை.. ஏனென்றால் ஜிG20 உச்சி மாநாடு நடக்கும் வரை இதில் ஒருமித்த உடன்பாடு ஏற்படாது என்றும் இதனால் கூட்டு அறிக்கைக்குச் சாத்தியமே இல்லை என்றே பலரும் கூறினர். இதனால் வெறும் உரையுடன் நாம் ஜி20ஐ நடத்தி இருக்க வேண்டும். இருப்பினும், அதை மாற்றி ஒருமித்த கருத்தை ஏற்பட வைத்துள்ளது பெரிய சாதனை தான்.
உக்ரைனில் போர் தொடரும் நிலையில், நாம் ரஷ்யாவைக் கண்டிக்க வேண்டும் என்று ஒரு தரப்பு நாடுகள் கூறினர். அதேநேரம் ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் அது குறித்து எந்தவொரு கருத்தும் சொல்லக் கூடாது என்றார்கள். இந்தியாவால் அந்த இரண்டிற்கும் இடையே ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடிந்தது. இது ஒரு குறிப்பிடத்தக்க ராஜதந்திர சாதனையாகும். ஏனென்றால் கூட்டு அறிக்கை இல்லாமல் உச்சி மாநாடு நடந்தால், அது தலைமை ஏற்றுள்ள நாட்டிற்கு எப்போதும் பின்னடைவாகவே கருதப்படும்.
யாரும் செய்யாததைச் செய்துள்ளனர்: தலைமை பொறுப்பில் இதற்கு முன்பு இருந்த எந்தவொரு அரசும் செய்யாத ஒரு விஷயத்தை இந்தியா செய்துள்ளது. இதனை அவர்கள் நாடு தழுவிய நிகழ்வாக மாற்றினர். இந்தியா முழுக்க இருக்கும் 58 நகரங்களில் 200 கூட்டங்களை வெற்றிகரமாக நடத்தி அவர்கள் ஜி20 நிகழ்வை மக்களுக்கான ஜி20 நிகழ்வாக மாற்றியுள்ளனர். பொது நிகழ்வுகள், பல்கலைக்கழக இணைப்பு திட்டங்கள் எனப் பல விஷயங்களை நாம் செய்துள்ளோம்.
இது இந்தியாவுக்கு ஒரு வகையில் மிகப் பெரிய பெருமையைச் சேர்த்துள்ளது. அதேநேரம் மற்றொரு புறம் இதை தங்களுக்கானது ஆளும் தரப்பு சொந்தம் கொண்டாடவும் முயலும்" என்று அவர் தெரிவித்தார். ஜி20 உச்சி மாநாட்டிற்காக மோடி அரசைக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவரே இந்தளவுக்குப் பாராட்டியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
விமர்சனம்: தொடர்ந்து ஜி20 மாநாட்டில் குடியரசுத் தலைவர் வழங்கிய இரவு விருந்திற்கு எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைக்கப்படாதது குறித்துப் பேசிய சசி தரூர், "ஜனநாயகத்தின் தாய் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் ஒரு நாடு, எதிர்க்கட்சி இல்லாமல் இந்த நிகழ்ச்சியை நடத்தியுள்ளது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
எதிர்க்கட்சிகளுக்கு அவர்கள் இடமளிக்கவில்லை. டெல்லி பிரகடனத்திற்கு ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும் என்பதில் முனைப்புக் காட்டிய அவர்கள், அதை இங்குள்ள கட்சிகளிடம் செய்யத் தவறிவிட்டனர்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications