தங்க கடத்தலில் சிக்கும் கேரளா அரசியல் 'தலைகளின்' உதவியாளர்கள்!டெல்லியில் சசி தரூர் மாஜி செயலர் கைது!
டெல்லி: டெல்லி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல் வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூரின் முன்னாள் உதவியாளர் சிவகுமார் பிரசாத் கைது செய்யப்பட்டிருப்பது புதிய சர்ச்சையாகி இருக்கிறது.
கேரளா லோக்சபா தொகுதி காங்கிரஸ் எம்பியாக இருப்பவர் சசி தரூர். பல்வேறு சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்து அடிக்கடி விமர்சனங்களில் சிக்குபவர். சசிதரூரின் தனிச் செயலாளராக இருந்தவர் சிவகுமார் பிரசாத் (வயது 72). சில காலத்துக்கு முன்னர் சசி தரூரிடம் இருந்து அவர் விலகி சென்றுவிட்டார்.

இந்த நிலையில் டெல்லி விமான நிலையத்தில் தங்கம் கடத்தும் கும்பல் ஒன்றை சுங்கத் துறை அதிகாரிகள் சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த கும்பலில் ஒருவராக சிவகுமார் பிரசாத்தும் இருந்தார். சிவகுமார் பிரசாத்திடம் இருந்து ரூ35 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சசி தரூரின் முன்னாள் செயலாளர் சிவகுமார் பிரசாத், தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் சர்ச்சையாகவும் வெடித்துள்ளது. கேரளா மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் கூறுகையில், தங்க கடத்தல் உட்பட சட்டவிரோத செயல்களில் காங்கிரஸும் இடதுசாரிகளும் ஈடுபட்டு வருகின்றன. ஊழல் செய்யும் இரு கட்சிகளும் ஒன்றாக இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ளன என்றார்.
இது தொடர்பாக சசி தரூர் விளக்கம் அளித்துள்ளார். அதில், சிறுநீரக பிரச்சனையால் பணியில் இருந்து சிவகுமார் விலகினார். அவர் தற்போது தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கி இருப்பது அதிர்ச்சி தருகிறது. இந்த விவகாரத்தில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதை வரவேற்கிறேன் என கூறியுள்ளார் சசி தரூர்.
கேரளா அரசியலில் தங்க கடத்தல் வழக்குகள் அவ்வப்போது புயலைக் கிளப்புகின்றன. 4 ஆண்டுகளுக்கு முன்னர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கம் சிக்கியது. அதில் முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளர் சிவசங்கர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த தங்கக் கடத்தல விவகாரமே ஓயாத நிலையில் காங்கிரஸும் தங்க கடத்தல் விவகாரத்தில் சிக்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications