மரண தண்டனை விதித்த வங்கதேச தீர்ப்பாயம்.. இந்தியாவில் இருந்தபடி ஷேக் ஹசீனா வெளியிட்ட பரபர அறிக்கை
டெல்லி: மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சூழலில் இது குறித்து ஷேக் ஹசீனா தனது தரப்பு கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அரசியல் நோக்கத்த்டன் வழங்கப்பட்ட தீர்ப்பு என ஷேக் ஹசீனா கூறியுள்ளார்.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற வன்முறையின் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கண்டதும் சுட உத்தரவிட்டது தொடர்பான வழக்கில் அவருக்கு இந்த உச்சபட்ச தண்டனையை வங்கதேச சர்வதேச குற்ற தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.

ஷேக் ஹசீனா பதில்
கடந்த ஆண்டு போராட்டம் உச்சத்தில் இருந்த போது, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார் ஷேக் ஹசீனா. ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு வந்த ஷேக் ஹசீனா தற்போது வரை இங்குதான் உள்ளர். ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசு இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்து வருகிறது.
எனினும், இது தொடர்பாக இந்தியா எந்த வித பதிலும் அளிக்கவில்லை. தனக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு அளிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக தனது அதரவாளர்களுக்கு ஆடியோ மெசேஜ் ஒன்றை ஷேக் ஹசீனா அனுப்பியிருந்தார். அதில், "தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. இதுபோன்ற தீர்ப்புகளைப் பற்றி தான் கவலைப்படவில்லை.
ஆணவ நோக்கத்தோடு
முகம்மது யூனூஸ் தலைமையிலான இடைக்கால அரசு தனது அவாமி லீக் கட்சியை அழிக்க நினைக்கிறது. ஆனால், அது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. அவாமி லீக் கட்சி அடித்தளத்தில் இருந்து எழுந்த கட்சி" என்று கூறியிருந்தார். தீர்ப்பில் மரண தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில் ஷேக் ஹசீனா, பயங்கரவாத சிந்தனை கொண்டவர்கள் ஆணவ நோக்கத்தை இது வெளிப்படுத்துகிறது"என்று கூறியுள்ளார்.
குற்றச்சாட்டுக்களை முற்றிலும் நிராகரிக்கிறேன்
இது தொடர்பாக ஷேக் ஹசீனா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "வங்கதேசத்தில் தற்போதைய நிர்வாகம் மீது அனுதாபம்தான் ஏற்படுகிறது. எனக்கு எதிராக சர்வதேச தீர்ப்பாயம் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை நான் முற்றிலும் நிராகரிக்கிறேன். கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஏற்பட்ட மரணங்களுக்கு நான் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கிறேன்.
ஆனால் நானோ அல்லது பிற அரசியல் தலைவர்களோ போராட்டக்காரர்களைக் கொல்ல உத்தரவிடவில்லை. தீர்ப்பாயத்தில் எனது தரப்பு வாதங்களை முன்வைக்க எனக்கு நியாயமான எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை. எனது விருப்பப்படி வழக்கறிஞர்கள் என்னைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் கூட அனுமதிக்கப்படவில்லை. பெயரில் சர்வதேசம் என்று இருந்தாலும் தீர்ப்பாயத்திற்கு சர்வதேச தொடர்பு எதுவும் இல்லை. பாரபட்சமற்றதும் இல்லை.
யூனுஸ் அரசுக்கு சவால் விடுக்கிறேன்
வன்முறை மிக்க பிற்போக்குத்தனமான முகம்மது யூனுஸ் நிர்வாகத்தால் வங்கதேச மக்களை முட்டாளாக்க முடியாது. நீதியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றதாக தெரியவில்லை. மாறாக, அவாமி லீக்கை பலிகடா ஆக்குவதே அவர்களின் நோக்கமாக இருந்தது.
முறையான தீர்ப்பாயத்தில் வழக்கு விசாரணையை எதிர்கொள்வதில் எனக்கு எந்த அச்சமும் இல்லை. என் மீதான குற்றச்சாட்டுக்களை ஹாக்கில் உள்ள சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தில் நடத்த வேண்டும் என்று நான் முகம்மது யூனுஸ் அரசுக்கு சவால் விடுக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications