ஷேக் ஹசீனா எங்கிருக்கிறார் தெரியுமா? மகளுடன் பூங்காவில் உலா வந்த வங்கதேச மாஜி பிரதமர்! இடம் இதுதான்
டெல்லி: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு உயிருக்கு பயந்து நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். நம் நாட்டில் அவர் எங்கு இருக்கிறார்? என்ற தகவல் பற்றி மத்திய அரசு ரகசியம் காத்து வருகிறது. இந்நிலையில் தான் ஷேக் ஹசீனா தனது மகளின் வீட்டில் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவரது மகள் யார்? அவர் எங்கு இருக்கிறார்? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கும் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் போராடினர். கடந்த மாதம் 5ம் தேதி வங்கதேச பிரதமர் அலுவலகத்தை நோக்கி போராட்டக்காரர்கள் ஊர்வலம் சென்ற நிலையில் ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டில் தஞ்சமடைந்தார்.

கடந்த 2009 முதல் கடந்த மாதம் வரை தொடர்ந்து 15 ஆண்டுகளாக அவர் பிரதமராக இருந்த காலத்தில் நம் நாட்டுடன் நெருக்கமாக இருந்தார். இதனால் அவருக்கு நம் நாடு தற்காலிகமாக அடைக்கலம் கொடுத்துள்ளது. இதனால் தான் அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தவுடன் அந்த நாட்டின் ராணுவ ஹெலிகாப்டரில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹின்டன் விமான தளத்தில் வந்து இறங்கினார்.
ஷேக் ஹசீனாவுடன் அவரது சகோதரி ஷேக் ரெஹானா, 7 ராணுவ வீரர்கள் வந்தனர் அதன்பிறகு 7 ராணுவ வீரர்கள் மீண்டும் ராணுவ ஹெலிகாப்டரில் வங்கதேசம் புறப்பட்டு சென்றனர். ஷேக் ஹசீனாவுடன் அவரது சகோதரி ஷேக் ரெஹானா ஆகியோர் நம் நாட்டில் இருந்தனர். ஷேக் ஹசீனாவை அன்றைய தினம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசினார். அதன்பிறகு ஷேக் ஹசீனா நம் நாட்டில் நீண்ட காலம் தங்க விரும்வில்லை. விரைவில் ஐரோப்பிய நாடு, அமெரிக்கா, அல்லது சவுதி அரேபியாவில் தஞ்சமடைய விரும்புகிறார். எந்த நாட்டில் அடைக்கலம் கிடைக்கிறதோ? அங்கு அவர் புறப்பட்டு செல்வார். அதுவரை இங்கு தங்கியிருப்பார் என்று தகவல்கள் வெளியாகின.
ஆனால் ஷேக் ஹசீனாவுக்கு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அடைக்கலம் கொடுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஷேக் ஹசீனா கடந்த 45 நாட்களாக நம் நாட்டிலேயே தங்கியிருக்கிறார். அவருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கூட ஷேக் ஹசீனா நம் நாட்டில் எந்த இடத்தில் தங்கியிருக்கிறார்? என்ற தகவல் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. மத்திய அரசு இந்த விஷயத்தில் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது.
இந்நிலையில் தான் ஷேக் ஹசீனா எங்கு இருக்கிறார்? என்பது பற்றி முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தற்போது ஷேக் ஹசீனா டெல்லியில் இருப்பதாக கூறப்படுகிறது. டெல்லியில் அவரது மகள் சைமா வாஜித் வசித்து வரும் நிலையில் ஷேக் ஹசீனா அவருடன் தங்கி உள்ளதாக கூறப்படுகிறது. மகள் சைமா வாஜித்துடன், ஷேக் ஹசீனா டெல்லியின் லோதி கார்டன் பூங்காவில் உலா வந்ததை சிலர் பார்த்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஷேக் ஹசீனாவின் மகள் சைமா வாஜித் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே டெல்லியில் வசித்து வருகிறார். அவர் உலக சுகாதார நிறுவனத்தின் தெற்கு ஆசிய பிராந்திய பிரதிநிதியாக செயல்பட்டு வரும் நிலையில் டெல்லியில் குடும்பத்துடன் வசிக்கிறார். இந்நிலையில் தான் தற்போது ஷேக் ஹசீனா தனது மகள் சைமா வாஜித்துடன் அங்கு தங்கி உள்ளதாகவும், மேற்கண்ட விபரங்களையும் பிரிட்டனை சேர்ந்த பைனான்சியல் டைம்ஸ் எனும் பத்திரிகை செய்தியாக வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications