"பக்கா ஸ்கெட்ச்"! கச்சிதமாக தீர்த்துக்கட்டப்பட்ட பஞ்சாப் பாடகர் மூஸ் வாலா! மாஸ்டர் மைன்ட் இவர்தானாம்
டெல்லி: பஞ்சாப் பாடகர் சித்து மூஸ் வாலா படுகொலை செய்யப்பட்ட நிலையில், இது குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
பஞ்சாபைச் சேர்ந்த 28 வயது இளம் பாடகர் சித்து மூஸ் வாலா கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்டார். இவர் பாடகர் மட்டுமில்லை, பஞ்சாப் காங்கிரஸ் கட்சியிலும் இளம் தலைவர்களில் ஒருவராக அறியப்பட்டவர்.
ஒரு மாணவி.. பப்.. எம்எல்ஏ மகன் உட்பட 6 பேர்.. இந்தியாவையே உலுக்கிய கூட்டு வன்புணர்வு! கொடூர பின்னணி!
காங்கிரஸ் கட்சியில் கடந்த டிசம்பர் மாதம் இணைந்த இவர், கடந்த சட்டசபைத் தேர்தலிலும் போட்டியிட்டார். இருப்பினும், அவரால் தேர்தலில் வெல்ல முடியவில்லை.
படுகொலை
இந்தச் சூழலில் தான் அவர் கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்டார். மே 29ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டத்தின் ஜவஹர்கே என்ற இடத்தில் நண்பர்கள் உடன் அவர் ஜீப்பில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரை நோக்கி சரமாரியாகச் சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போதே பரிதாபமாகப் பலியானர்.
அழுத்தம்
அவரது உடல் தகனம் செய்யப்பட்ட போதும் கூட பெருந்திரளான ரசிகர்களும், காங்கிரஸ் தொண்டர்களும் திரண்டனர். சமீபத்தில் தான் உள் துறை அமைச்சர் அமித் ஷா, ராகுல் காந்தி மூஸ் வாலா தந்தையைச் சந்தித்து ஆறுதல் கூறினார். மூஸ்வாலா மரணம் பஞ்சாபில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மூஸ் வாலாவுக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பைப் பஞ்சாப் அரசு விலக்கி இருந்த நிலையில், அதற்கு மறுநாளே அவர் படுகொலை செய்யப்பட்டது அம்மாநில அரசுக்கு அழுத்தத்தை அதிகரித்தது.
கேங் வார்?
முதல்கட்டமாகக் கொலையாளிகள் பயன்படுத்திய வாகனத்தைக் கண்டுபிடித்த போலீசார், அதை வழங்கியதாகச் சிலரைக் கைது செய்தனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படுகொலை இரு கேங்களுக்கு இடையே பழி வாங்கும் நோக்கில் நடத்தப்பட்ட கொலையாக இருக்கும் என்றே போலீசார் கருதினர். லாரன்ஸ் பிஷ்னோய் கேங்கை சேர்ந்த விக்கி மிடுகேரா என்பவர் சில மாதங்களுக்கு முன்பு, கொலை செய்யப்பட்டார் அவரது கொலையில் சித்து மூஸ் வாலாவின் மேலாளர் ஷகன்ப்ரீத்தின் பெயர் இடம் பெற்று இருந்தது.
மாஸ்டர் மைன்ட்
எனவே, அதற்குப் பழிவாங்கும் வகையில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகின்றனர். இது குறித்து டெல்லி போலீஸ் சிறப்புச் சிபி ஹெச்ஜிஎஸ் தலிவால் கூறுகையில், "இந்தக் கொலைக்கு மாஸ்டர் மைன்டாக செயல்பட்டவர் லாரன்ஸ் பிஷ்னோய். துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் நெருங்கிய கூட்டாளியை மகாராஷ்டிரா காவல்துறைக்கு 14 நாள் போலீஸ் காவலில் எடுத்துள்ளது. இப்போதைய சூழலில் கூடுதல் தகவல்களைக் கூற முடியாது. இப்போது வெளியே இருக்கும் குற்றவாளிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.
காரணம் என்ன
முன்னதாக இதை கேங் வார் காரணமாக நடந்த படுகொலை என்று போலீசார் கருதிய நிலையில், இப்போது அதையும் போலீசார் சந்தேகின்றனர். கொலைக்கான நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை என்று குறிப்பிட்ட போலீஸ் அதிகாரி தலிவால், விசாரணையின் ஒரு பகுதியாக அது நடைபெற்று வருகிறது என்றும் இப்போதைய சூழலில் கூடுதல் தகவல்களைக் கூற முடியாது என்றும் தெரிவித்தார். வரும் நாட்களில் இந்த வழக்கில் பல நபர்கள் கைதாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.