ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் பொய் பிரசாரங்களை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும்: சோனியா பொளேர் அட்டாக்
டெல்லி: ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் பொய் பிரசாரங்களை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும்; கொள்கை ரீதியிலான இந்த பொய் பிரசாரங்களை நாம் எதிர்கொள்வோம் என்று காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார்.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்று மணிப்பூர் மாநில சட்டசபைகளுக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வியூகங்கள் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்கள், மாநிலங்களின் பொறுப்பாளர்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தின் தொடக்கத்தில் சோனியா காந்தி பேசியதாவது: பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றின் தவறான பிரசாரங்களை கருத்தியல் ரீதியாக நாம் எதிர்கொள்ள வேண்டும். பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றுக்கு எதிரான யுத்தத்தில் நாம் வெல்ல, அவற்றின் பொய்களை மக்களிடத்தில் நாம் அம்பலப்படுத்த வேண்டும்.

ஒற்றுமையும் ஒழுக்கமும் தேவை
நாடு எதிர்கொண்டிருக்கிற பிரச்சனைகள் தொடர்பாக கட்சி மேலிடம் நாள்தோறும் விளக்கமான அறிக்கைகள் வெளியிடும். கொள்கை ரீதியான பிரச்சனைகளில் உரிய விளக்கங்களைத் தர தயாராக இருக்கிறோம். பல்வேறு மாநிலங்களில் உட்கட்சி பிரச்சனைகள் உள்ளன. காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ஒழுக்கமும் ஒற்றுமையும் மிக முக்கியமான தேவையாகும்.

காங். கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்
காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை நாம் வலுப்படுத்த வேண்டும். தனிநபர்கள் தங்களது லட்சியங்கள், விருப்பங்கள் குறித்து சிந்திக்காமல் கட்சி நலன் குறித்து சிந்தித்து செயல்பட வேண்டும். காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தங்களைப் பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும்.

பாஜக அரசு மீது அட்டாக்
காங்கிரஸ் நிர்வாகிகள் பாஜக, ஆர்.எஸ்.எஸ்.-ன் பொய் பிரசாரங்களை அடையாளம் கண்டு அதனை எதிர்ப்பதற்கு முழு அளவில் தயாராக வேண்டும். அரசு நிறுவனங்களை மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு சீர்குலைத்து வருகிறது. நமது ஜனநாயக அமைப்புகளின் அடிப்படையையே பாஜக அரசு தகர்த்து வருகிறது. இதற்கு எதிராக நாம் போராட வேண்டும். மத்திய பாஜக அரசுக்கு எதிராக அனைத்து நிலைகளிலும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அநீதிக்கு எதிராக சமத்துவமின்மைக்கு எதிராக காங்கிரஸ் நிர்வாகிகள் போராட வேண்டும். இவ்வாறு சோனியா காந்தி கூறினார்.

பஞ்சாப் காங். நிலவரம்
சட்டசபை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. ஆனால் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டியில் நிலவும் உட்கட்சி பூசல் அக்கட்சிக்கு கடும் பின்னடவை ஏற்படுத்தலாம் என கருத்து கணிப்புகள் தெரிவித்திருக்கின்றன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஒழுக்கத்தையும் ஒற்றுமையையும் கடைபிடிக்க வேண்டும் என சோனியா காந்தி அறிவுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications