14 சதவீத ஜிஎஸ்டி நிலுவைத் தொகை.. மாநிலங்களுக்கு தராமல் துரோகம்.. மத்திய அரசை விமர்சித்த சோனியா
டெல்லி: 14% ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மாநிலங்களுக்கு தராமல் மத்திய அரசு துரோகம் செய்துவிட்டது என 7 மாநில முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டினார்.
கொரோனா நோய் தொற்றால் இந்தியாவில் பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ளது. வாட் வரி, கலால் வரி உள்ளிட்டவைகளால் மாநிலங்கள் 53 ஆயிரம் கோடி வருமானத்தை இழந்துள்ளன.
ஜிஎஸ்டி வரிகளில் விலக்கு அளித்துள்ளதால் மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி வரி வருமானங்கள் குறையும். இதனால் ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டுகளில் மாநில அரசுகள் வருமானத்திற்கு பதிலாக ரூ 1.2 லட்சம் கோடி இழப்பீட்டை சந்திக்கும் என தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் கொரோனா காலத்தில் மாணவர்களின் உயிருடன் விளையாடும் வகையில் செப்டம்பர் 1 முதல் 6 வரை ஜேஇஇ தேர்வுகளையும், செப்டம்பர் 13-ஆம் தேதி நீட் தேர்வுகளையும் நடத்த தேசிய தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தலுக்கிடையே தேர்வுகளை நடத்தக் கூடாது என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தும் மாணவர்களுக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை. இந்த நிலையில் இன்று மதியம் 2.30 மணிக்கு 7 மாநில முதல்வர்களுடன் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார்.
இதில் சோனியா கூறுகையில், மதச்சார்பின்மை, அறிவியல் விழுமியங்களுக்கு எதிரானது தேசிய கல்வி கொள்கை. சுற்றுச் சூழல் வரைவு அறிக்கை சூழல் சட்டங்களை பலவீனமடைய செய்துவிட்டது. 14% ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மாநிலங்களுக்கு தராமல் மத்திய அரசு துரோகம் செய்துவிட்டது என்றார் சோனியா.
ஏன் தேமுதிக தனித்து போட்டி? பிரேமலதாவின் பல்ட்டிக்கு என்ன காரணம்.. திமுகவுடன் மீண்டும் ரகசிய பேச்சா?
இந்த ஆலோசனை கூட்டத்தில் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், புதுவை முதல்வர் நாராயணசாமி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமண்ட் சோரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.