வழக்கத்தை விட குறைவாக பெய்யும் தென்மேற்கு பருவமழை.. நாடு முழுவதும் நீடிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு
டெல்லி: தற்போதைய நிலவரப்படி தென்மேற்கு பருவமழை 38 சதவீதம் குறைவாக பெய்திருப்பதாக, இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை தாமதமாக துவங்கியதால், எதிர்பார்த்ததை விட குறைவான மழையே பதிவாகி உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் வழக்கமாக பெய்யும் மழையின் அளவு, ஆசிய நாடுகளில் தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதாகவும் கூறியுள்ளது.

வழக்கமாக தென்மேற்கு பருவமழையானது ஜூன் 1-ம் தேதி துவங்கி, செப்டம்பர் 30 வரை பெய்யும். நடப்பாண்டு சுமார் 1 வாரத்திற்கும் மேலாக தாமதமாக தான் பருவமழை துவங்கியது.
கடந்த 22-ம் தேதி வரை ஒட்டுமொத்தமாக மழைப்பொழிவு குறைவாகவே பதிவாகி இருப்பதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த ஆண்டு இதே நேரத்தில் 107 மி.மீட்டர் மழை பெய்திருந்த நிலையில், நடப்பாண்டு இதே காலகட்டத்தில் 38 சதவீதம் அளவு மழை குறைந்துள்ளது.
மேலும் இதுவரை 65 மி.மீட்டர் மட்டுமே மழைபெய்திருப்பதாக இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதுமே பரவலாக கடும் கோடை வெப்பம் மற்றும் வறட்சி வாட்டி வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் தண்ணீருக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
தாமதமாக துவக்கியுள்ள தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாத காரணத்தால், நாடு முழுவதும் உள்ள 91 முக்கிய அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் வழக்கமான அளவை விட குறைவான அளவே நீர் இருப்பு காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
38 சதவீதம் அளவிற்கு தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்துள்ளதால், நாட்டிலுள்ள பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு இன்னும் நீடிப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும் இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள வானிலை மையம் நாட்டின் 51% இடங்களில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரை பெய்த மழையை விட, இந்த ஆண்டு மழையின் அளவு குறைந்துள்ளது. மேலும் அணைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள தண்ணீரும் மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது
குறிப்பாக தென்னிந்தியாவில் தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் உள்ள நீர் நிலைகள் தொடர்ந்து வறண்டேகாணப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.நெல், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி உள்ளிட்ட பயிர்களின் சாகுபடியும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது












Click it and Unblock the Notifications